
திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் நடப்பதாக திருச்சி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருச்சி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு(பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் ஸ்பாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அங்குள்ள வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். வீட்டில் உள்ள பொருட்களைச் சோதனை செய்தனர். அதில் ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு போலீசார் அவர்களைக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஸ்பாவின் மேலாளர் லட்சுமி தேவியை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உரிய அனுமதியின்றி ஸ்பா நடத்தியதாக உரிமையாளர் செந்தில் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில், தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்த போதிலும் திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்டப் பொறுப்பாளர் இதுபோன்ற சமூக விரோதச் செயலில் ஈடுபட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.