
நேற்று கோவை மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான சித்தாபுதூர் பகுதியில் கோவை பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தமிழகம் வரும் போது இந்த அலுவலகத்திலேயே முக்கியமான ஆலோசனைகளில் ஈடுபடுவர். தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் முக்கியமான முடிவுகளை மாவட்ட அலுவலகத்தில் மட்டுமே எடுப்பார். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் அடையாளம் தெரியாத சில நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி சென்றனர். பெரிய அளவில் அது வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் இதேபோல் இந்து முன்னணி நிர்வாகி ஒருவரின் கார் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் வெற்றிலைக்காரன் தெருவில் வசித்து வரும் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகி என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துள்ளனர். இதனால் காரின் மேல் பகுதி சிறிதளவு எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நிகழும் இப்படிப்பட்ட சம்பவங்களால் பரபரப்பில் உள்ளது கோவை.