Skip to main content

தாலி கட்டும் நேரத்தில் அதிர்ச்சி தந்த மணமகள் - ஏமாற்றத்துடன் திரும்பிய மணமகன்

Published on 13/09/2018 | Edited on 13/09/2018
The groom is shocked


தாலி கட்டும் நேரத்தில் மணமேடைக்கு வர மறுத்து மணமகள் அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மணமகன் ஏமாற்றத்துடன் திரும்பிய நிகழ்வு ஏற்பட்டது. 
 

தஞ்சை தெற்கு வீதி ஜவுளி செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவா. 32 வயதான இவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்தனர். இதில் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
 

முகூர்த்த தேதியான 12.09.2018 புதன்கிழமை காலை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. முதல் நாள் மாலையே மண்டபத்தில் உறவினர்கள் வந்திருந்தனர். பின்னர் மணமகள் அழைத்து வரப்பட்டார். 
 

காலையில் உறவினர்கள், ஊர் மக்கள், நண்பர்கள் என வந்தனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முகூர்த்த நேரம் வருவதால் மணமகன் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். 
 

புரோகிதர் மந்திரங்களை ஓதினார். காலை 10 மணிக்கு மணமகளை அழைத்து வரச் சொன்னார் புரோகிதர். மணமகளை அழைத்து வர உறவினர்கள் சென்றனர். அப்போது மணமகள் மணமேடைக்கு வர மறுத்தார். 
 

இந்த விசயம் உடனே அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மணமகள் அறைக்கு சென்ற பெற்றோர் என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போது எனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
 

தாலி கட்டும் நேரத்தில் குடும்ப மானத்தை வாங்கி விடாதே, மணமேடைக்கு வா என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். எந்த சமாதானமும்  செய்ய வேண்டாம். நான் வர மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார்.
 

நேரம் ஆகிறது என்று புரோகிதர் கூற, அப்போது மணமகள் வர மறுத்த விசயம் வெளியே கசிந்தது. இதையடுத்து இரு வீட்டு உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறும்போது நாங்கள் என்ன பண்ண முடியும் என்று கேட்டுள்ளனர்.
 

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து உறவினர்களிடம் பேசினார்கள். பின்னர் மணமகளிடம் பேசினார்கள்.


அப்போது அவர், தான் தஞ்சையில் கூரியர் அலுவலத்தில் வேலை பார்க்கும்போது ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாவும் கூறியிருக்கிறார்.
 

இதனை கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மணமகன் சிவா, இதனை பெண் பார்க்க வராங்க என்று சொல்லும்போதே சொல்லியிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். இந்த திருமண ஏற்பாடும் நடந்திருக்காது. ஏன் என்னை இப்படி செய்துவிட்டாய் என்றார். 
 

இதற்கு மணமகள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். எல்லா நஷ்டமும் எங்களுக்குத்தான் என்று கூறிய மணமகன், இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
 

மணமகன் வீட்டார், இந்த திருமணத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அந்த தொகையை தரும்படி கேட்டுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் பேசிக்கொள்ளலாம் என்று அங்கு சென்றனர்.
 

அங்கு வந்த மணமகள் வீட்டார், அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்று கூறினர். நீண்ட நேரம் பேசி பார்த்தும், மணமகள் வீட்டார் எங்கள் வீட்டில் அவ்வளவு வசதி இல்லை என்று கூறியதால், இருதரப்பும் காவல்நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

2 கிலோமீட்டர் உள்வாங்கிய கடல்... பொதுமக்கள் அச்சம்!

Published on 27/08/2021 | Edited on 30/08/2021

 

antarvedi Public in fear

 

கடல் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோதாவரி ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடம் ஆந்தர்வேதி என்று அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்த பகுதியில் கடல் திடீரென சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. மீனவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்தர்வேதி  பகுதியில் சில நாட்களாக கடல் அலை முன்னோக்கி அதிகரித்து வந்த நிலையில், நேற்று திடீரென கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கிய பகுதிக்கு சென்று சிலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் அந்த கடற்கரை பகுதியின் முந்தைய புகைப்படத்தையும் தற்பொழுது உள்வாங்கிய நிலையில் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

Next Story

செல்ஃபோனில் எடுத்த புகைப்படங்களை காண்பித்த போலி கமிஷ்னர்... அதிர்ந்துபோன காவல்துறை உயரதிகாரிகள்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

The fake commissioner who showed the photos taken on his cell phone ... the police chiefs who were shocked

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே போலி போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு, போலீஸ் வாகனம் போல் சைரன் வைத்த ஜீப்பில் சந்தேகத்துக்கிடமான நபர் வருவதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே காத்திருந்த போலீசார், அவ்வழியே வந்த போலீஸ் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். ஜீப்பிலிருந்து இறங்கியவர், அசிஸ்டன்ட் கமிஷனர் எனக்கூறி தன்னை மடக்கிய போலீசாரை மிரட்டியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியுள்ளார்.

 

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்ற நபர், போலியாக அடையாள அட்டை தயாரித்து, தன்னை போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் எனக் கூறிக்கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், விஜயன் சென்னையில் மூன்றாண்டுகளாக பிரபல கட்சி நடத்தும் சேனலில் பணியாற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட போலீஸ் அதிகாரிகளின் பழக்கம் மற்றும் பல விஐபிகளின் பழக்கம் விஜயனை திசைமாற்றியுள்ளது. போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதன் விளைவாக நடை, உடை, பாவனை என அனைத்தையும் மாற்றிக்கொண்டு அசிஸ்டன்ட்  கமிஷனர் அவதாரம் எடுத்துள்ளார் விஜயன். இதில் எதிர்பார்த்த அளவைவிட மரியாதையும், செல்வமும், செல்வாக்கும் கிடைத்ததால் தனது பயணத்தை இந்தியா முழுவதும் தொடர்ந்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் கியூ பிரான்ச் இன்டலிஜன்ட் போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார்.

 

The fake commissioner who showed the photos taken on his cell phone ... the police chiefs who were shocked

 

அதேபோல் கேரளா கட்டப்பனைக்குச் சென்றவர், க்யூ பிரான்ச் விசாரணைக்கு வந்திருப்பதாகக் கூறி, இரண்டு நாட்கள் தங்கி, இரண்டு போலீஸார் பாதுகாப்புடன் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவந்துள்ளார். “மற்ற மாநிலங்களுக்கு எப்படி  போன”  என கேட்ட போலீசாரிடம், “இலங்கைக்கே சென்று வந்துவிட்டேனே” என அதிர  வைத்துள்ளார். விசாரணை எல்லையின் உச்சகட்டமாக, தன்னை மடக்கிப் பிடித்த போலீஸிடம் தன் செல்ஃபோனில் இருந்த ஐந்து படங்களைக் காட்டியுள்ளார். அதில் ஐந்து மாநில முதல்வர்கள், ஒரு ஆளுநர் உட்பட பலருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போலீஸாரைத் தூக்கிவாரிப் போட்டது. கில்லாடியாக இருப்பாரோ என்ற கோணத்தில் இரண்டு துணை சூப்பிரண்டுகள், 5 டி.ஸ்.பி.கள் என போலீஸ் பட்டாளமே குவிந்து அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். ஆனால் அவரோ தான் எந்தத் தவறும் செய்யவில்லை. அசிஸ்டன்ட் கமிஷனர் உடையும், பதவியும், காரும் தனக்குப் பிடித்திருந்தது. அதனால் ராஜ மரியாதையுடன் வலம் வந்ததாக கூறியுள்ளார்.

 

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவன பெண் வாங்கி கொடுத்த ஜீப்பினை ரூபாய் 2 லட்சம் செலவில் போலீஸ் வாகனம் போல் ஜோடித்துள்ளார். சைரன் முதல் வாக்கி டாக்கி வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இவர் போட்ட கெட்டப், சீரியஸ் போலீஸா இல்லை சிரிப்பு போலீஸா என விடை தெரியாமல் விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ‘கஸ்டடி எடுத்திருந்தால் கக்கியிருப்பார், சீக்கிரம் முடித்துவிடுங்கள்’ என மேலிடம் கொடுத்த உத்தரவால், அவர் கையில் வைத்திருந்த இரண்டு டம்மி துப்பாக்கிகள் மற்றும் போலி போலீஸ் ஜீப்பை பறிமுதல் செய்து, வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.