Skip to main content

6 வயது சிறுமியிடம் சில்மிஷம்! தாய், சகோதரியுடன் மாணவன் கைது!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக தாய், சகோதரியுடன் மாணவனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 27ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி விவசாய நிலத்திற்கு சென்று திரும்பிய தனது பாட்டியிடம் நடந்ததை கூறி அழுதாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த மாணவனின் பெற்றோரிடம் சென்று கண்டித்தாராம். அதற்கு மாணவனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் சிறுமியின் பாட்டியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் பாட்டி, வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவன், அவனது தாய் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாணவனின் தாய், சகோதரியை வேலூர் பெண்கள் மத்திய சிறையிலும், மாணவனை செஞ்சி சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மாணவன் வந்தவாசி பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்