Skip to main content

பாஜக மாநில துணை தலைவர் சிறையில் அடைப்பு

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

BJP State secretary arrested in dharmapuri

 

நெஞ்சுவலி இருப்தாகக் கூறி நாடகமாடிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, காவல்துறையினர் பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பாரத மாதா நினைவக வாயில் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்த வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாஜக சார்பில் பாத யாத்திரை நடந்தது. அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம் யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று, பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்ரமணிய சிவா நினைவிடத்தை அடைந்தனர். அந்த நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினர் முயன்றனர்.

 

ஆனால் நினைவாலய வாயில் கதவு பூட்டப்பட்டு இருந்தது. நுழைவு வாயில் பூட்டைத் திறந்து விடும்படி அங்கிருந்த ஊழியரிடம், கே.பி.ராமலிங்கம் கேட்டார். ஆனால் அந்த ஊழியரோ, உயர் அதிகாரிகளின் உத்தரவின்றி கதவைத் திறந்து விட முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கே.பி.ராமலிங்கம், கீழே கிடந்த கல்லை எடுத்து பாரத மாதா நினைவக வாயில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் அவர் தலைமையில் பாஜகவினர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

 

இதையடுத்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாகவும், அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி கே.பி.ராமலிங்கம் மற்றும் பாஜகவினர் மீது பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கே.பி.ராமலிங்கத்தை ஆக. 14ம் தேதி கைது செய்தனர். சிறைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு அவருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு ரத்தக்கொதிப்பும், நெஞ்சுவலியும் இருப்பதாகக் கூறியதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பென்னாகரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, கே.பி.ராமலிங்கம் உடல்நலம் தேறியது. அவர் குணமடைந்ததாக மருத்துவர்கள் சான்றளித்தனர். இதனால் அவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை (ஆக. 18) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக பாப்பாரப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வந்தனர். ஆனால் அவர்களிடம் கே.பி.ராமலிங்கம் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், தன்னால் சிறைக்கு வர முடியாது என்றும் கூறினார். ஆனாலும் காவல்துறையினர், அவரை பலவந்தமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.