Skip to main content

சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பா.ஜ.க.வினர்... அச்சத்தில் பொதுமக்கள்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

loot

 

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் பட்டப்பகலில் நுழைந்த பா.ஜ.க.வினர் பொருட்களை சூறையாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில், ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட், ரஃபீகா என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் வாடகை தகராறு ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடையைக் காலி செய்யக் கூறி ரஃபீகா அடிக்கடி கடைக்கு வந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒப்பந்தப்படி ஷாநவாஸ் கடையைக் காலி செய்ய 2 வருடங்கள் கால அவகாசம் இருப்பதாகக் கூறிய ஷாநவாஸ் தரப்பு, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடையைக் காலி செய்ய மறுத்துள்ளனர். 

 

இவர்களுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், இன்று காலை ஊழியர்கள் வந்து கடையை திறந்த கொஞ்ச நேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கடைக்குள் நுழைந்து சுத்தியல், ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களை அடித்து நொறுக்கி, பொருட்களை சூறையாடத் தொடங்கியுள்ளனர். ஊழியர்கள் 6 பேர் மட்டுமே இருந்த நிலையில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்ட குதுப் எனும் ஊழியரை தள்ளிவிட்டு, வாடிக்கையாளர்களை வெளியே செல்லுமாறு மிரட்டி உள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் நெஞ்சுவலி ஏற்பட்ட ஊழியர் குதூப்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மற்ற ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 

BJP- party-men looted- supermarket-Public in -fear

 

காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட சிலர் சூறையாடிய பொருட்களோடு தப்பிச் சென்றுவிட, கடைக்குள் இருந்த 11 பேரை மட்டும் காவல்துறையினர் பிடித்து ஆயிரம் விளக்கு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதற்கட்ட விசாரணையில் 11 பேரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதில், தென்சென்னை இலக்கியப் பிரிவு மாவட்டச் செயலாளரான குணசேகரன் என்பவர்தான் முக்கிய நபர் என்பதும், மீதமுள்ள 10 பேரும் டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இந்தச் செயலில் ஈடுபட்டனர், ரஃபீகாவுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Ad

 

குறிப்பாக இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி.காட்சிகள் சிக்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் கடையை சூறையாடிய கும்பல், சி.சி.டி.வி காட்சிகளை சேமித்து வைக்கும் டி.வி.ஆர்-ஐ எடுத்துச் செல்வதற்கு பதிலாக கம்பியூட்டர் சி.பி.யு.வை திருடிச் சென்றதால், சி.சி.டி.வி டி.வி.ஆர் போலீசாரிடம் சிக்கியுள்ளது. 

 

பட்டப் பகலில் நடந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.