Skip to main content

தமிழகம் ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்: அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

Published on 01/04/2018 | Edited on 01/04/2018



 

Ayyakannu, PR.Pandian


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி 3-ந் தேதி நடக்கும் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்றும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே நாளில் போராட்டம் நடத்தி தமிழகம் ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாதகாலம் மத்திய அரசு அவகாசம் கேட்பது விவசாயிகளை ஏமாற்றுவதற்காகத்தான். இது கொலை செய்வதற்கு சமம். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் 3 மாதம் அவகாசம் கேட்பதால் இந்த ஆண்டும் தண்ணீர் வருவது கேள்விக்குறி தான். தண்ணீர் வரவில்லை என்றால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். விவசாயிகளை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கூட செயல்படுத்த மோடி மறுக்கிறார்.
 

கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டுவரும் கர்நாடக அரசை கலைக்க வேண்டும். கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எங்களை மத்திய அரசு ஒதுக்கிவைக்க வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டத்தை அறிவித்து பிசுபிசுக்க வைக்க வேண்டாம்.
 

தமிழகத்தில் 3-ந் தேதி 21 லட்சம் கடைகளை வணிகர் கள் அடைக்க இருக்கிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே நாளில் போராட்டம் நடத்தி தமிழகம் ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். இவ்வாறு கூறினார்.
 

பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிவடைந்தவுடன் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருந்தால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். 3-ந் தேதி திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம். அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.
 

தமிழக அரசு பஸ்களை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்துசெய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் செயல்படக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்