Skip to main content

யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Attention UPSC Mains Passers

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு யுபிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அந்த வகையில் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் கடந்த செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இதற்கான முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. முதன்மைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை விரைவில் வரும் எனவும், அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழும் 15 நாட்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் யுபிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் ஆளுமைத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 57 ஆண்டுகளாகத் திறம்பட செயல்பட்டு வருகிறது.

Attention UPSC Mains Passers

அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2023 ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 149 தேர்வர்களில், 15 பெண்கள் மற்றும் 22 ஆண்கள் ஆகமொத்தம் 37 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 5 பேர் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்தவர்கள்; அதிகபட்சமாக 6 பேர் புவியியல் பாடத்தை தேர்வு செய்தவர்கள். இவர்களுக்கு, 2023 ஜூன் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 24 தேதி வரை உணவு மற்றும் விடுதி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு பயிற்சி மையத்திலிருந்து, தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்புப் பேருந்து வசதி செய்து தரப்பட்டது. பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகையாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வர் ஒருவருக்கு தலா ரூ.25,000/- வீதம் வழங்கப்பட்டது.

தற்போது, இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வுப் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும். இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும், இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

இவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது 044-24621475 என்ற தொலைப்பேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள் www.civilservicecoaching.com விரைவில் அறிவிக்கப்படும். இம்மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000/- ஆண்டு தோறும் இம்மையத்தால் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

சார்ந்த செய்திகள்