![Attention-grabbing Chief Minister's train Journey](http://image.nakkheeran.in/cdn/farfuture/h92JLWS6LK5QY2M7xjlry0xvOHV9N7XLcYUk4kaOE3E/1670466430/sites/default/files/inline-images/n222402.jpg)
நலத்திட்ட உதவிகளை துவங்கி வைப்பதற்காக தென்காசி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. தென்காசி அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெறுகிறது. சுமார் பத்து மணிக்கு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி போன்றோரும் ரயிலில் பயணம் செய்தனர்.
அவர் பயணித்த சலூன் கோச் பெட்டியின் சிறப்பம்சங்கள்: இந்திய ரயில்வே இந்த கோச்சை உயர் பதவியில் இருப்பவர்களுக்காக உருவாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக இந்தப் பெட்டியானது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் கழிவறை வசதி, இரண்டு படுக்கை அறைகள், உணவு அருந்தும் இடம், சோபா, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்பெட்டியானது ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படும். பின்புறம் இருக்கும் கண்ணாடி ஜன்னல் மூலம் இயற்கை அழகை ரசித்தவாறு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பயணம் செய்ய விரும்பினால் 2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரயில்வேயில் இதுவரை 336 சலூன் கோச்கள் உள்ளன. இந்த கோச்சில் நேற்று இரவு தமிழக முதல்வர் பயணம் செய்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.