கோவை அருகே பேருந்தில் சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுக்கவில்லை என பயணி ஒருவர் நடு சாலையில் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்.எம்.எஸ் எஸ்.ஆர்.டி எனும் தனியார் பேருந்தில் பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் அன்னூரில் இருந்து புளியம்பட்டி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பயணச்சீட்டு வாங்கும் பொழுது ரங்கசாமியிடம் சரியான சில்லறை இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ரங்கசாமிக்கும் தனியார் பேருந்தின் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் சாலையின் ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துநரும் பயணி ரங்கசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.