![Attack on State President of Fair Price Shop Workers Union; 2 more arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/6LViYY_o5u2SP9UdauCUIGFzB9v6aima9Hxl3g5sU2A/1681320870/sites/default/files/inline-images/nm219.jpg)
நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில தலைவராக ஜெயச்சந்திர ராஜா உள்ளார். கடந்த மாதம் 21 ஆம் தேதி இரவு சிதம்பரம் மானா சந்து பகுதியில் அவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி சிதம்பரம் மெய்காவல் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின் தொடர்ந்து வந்த 2 நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த கொலை முயற்சி சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க கடலூர் எஸ்.பி ராஜாராம் 8 தனிப்படைகள் அமைத்தார். இந்த தனிப்படைகள் சென்னை, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வழக்கறிஞர் ஆனந்த் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இவர்கள் கூலிப்படையாக செயல்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து தேனி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்திற்கு பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர் ரகுராமன் (43) மற்றும் கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் தமிமுன் அன்சாரி (23) ஆகியோரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.