Skip to main content

செந்தில் பாலாஜி கைது; திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

nn

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதேபோல் அரசியல் கட்சி பிரபலங்களும் இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இந்த கைதிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ''எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பழிவாங்க மத்திய அரசு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

bb

 

அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “ஒருவரை ஊழல்வாதி போல சித்தரிப்பதும் ஏதோ ஒருவர் நாட்டையே கொள்ளை அடித்து விட்டார் என்பதைப் போல ஒரு உருவத்தை ஏற்படுத்துவதும், இதன் மூலமாக ஒரு மாநில அரசாங்கத்தை சிதைத்து விடலாம் என கருதுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம் ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது. அவரை நீக்க வேண்டுமா நீக்கலாம், விசாரணை செய்ய வேண்டுமா விசாரணை செய்யலாம், ஆனால் நள்ளிரவில் கைது செய்வது எதற்கு. அவர் என்ன நாட்டை விட்டு ஓடி விடுவாரா? ஆயுதம் வைத்திருக்கிறாரா? எதற்காக இந்த கைது'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இந்த கைது நடவடிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் பாஜக தனது சித்து விளையாட்டைத் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தது அநாகரிகத்தின் உச்சம்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்