Skip to main content

அரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை யூடியூபில் நேரடி ஒளிபரப்பு! - உயர் நீதிமன்றம் அதிர்ச்சி! 

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

Ariyar exam cancellation case trial live broadcast on YouTube! - High Court shocked!

 

 

கரோனா ஊரடங்கால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை வழங்குவதற்கு தடைகோரி ராம்குமார் மற்றொரு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்குகளில் பதிலளித்த தமிழக உயர் கல்வித்துறை, அனைத்து பல்கலைக்கழகங்களிடம் ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலன் கருதியுமே இந்த முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தது.

 

மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்குகள், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் காணொளியில் நுழைந்து நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால்,  அனைத்து வழக்குகளின் விசாரணையும் நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில், இன்று மீண்டும் 16-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தொடங்கியது முதல் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் கிடைக்கும் காட்சிகளை,  சில மாணவர்கள் சட்டவிரோதமாக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளனர். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வீடியோ கான்ஃபரன்சிங் நடைமுறைகளை, வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்வதோ, ஸ்கிரீன்ஷாட் எடுப்பதோ நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என ஏற்கனவே பல நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

 

இந்நிலையில், இன்று யூடியூபில் ஒளிபரப்பியது நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.