
கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராக பதவி வகித்த சாருமதி, 2019 மே 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதன்பின் காலியான பதவிக்கு பூர்ண சந்திரனை நியமித்து, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கல்லூரிக் கல்வி இயக்குநராக உள்ளவர், பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், அப்பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். ஆனால், பூர்ணசந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக, காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பூர்ண சந்திரனை விட சீனியரான என்னை, கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமித்திருக்க வேண்டும். அவரை, நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், பணி மூப்பில் உள்ள கீதாவை விடுத்து பூர்ணசந்திரனை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், பூர்ணசந்திரன் நியமனம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு செப்டம்பர் 22-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, உயர் கல்வித்துறைச் செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குனரகம் மற்றும் பூர்ணசந்திரனுக்கு உத்தரவிட்டார்.