Skip to main content

தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது: சபாநாயகர் தரப்பு வாதம்!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். மூன்றாவது நாளாக இன்று சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆரியமா சுந்தரம் தனது வாதத்தை தொடங்கியுள்ளார்.

அந்த வாதத்தில் "கட்சிக்கு வெளியில் இருந்து தாக்குதலை நடத்தும் போது அது கட்சியை விட்டு வெளியேறியதாக தான் எடுத்துக் கொள்ள முடியும். தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்தது என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான அவர்களின் ஆதரவை திரும்ப பெற்று கொண்டதாகவே கருத முடியும்.

18 எம்.எல்.ஏக்கள் தனி நபர் மீது புகார் அளிக்கவில்லை. அதிமுக உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை கொண்ட முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். முதல்வருக்கு எதிராக ஆளுநரால் நடவடிக்கை எடுக்க முடியாது என டிடிவி தரப்பிற்கு தெரியும். ஆளுநருக்கு அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே உள்ளது. அவரிடம் அரசியல் சாசன கடமையை ஆற்றுங்கள் என கூறுவது ஆட்சியை கலைப்பதற்காக அளித்த புகாராகவே கருத முடியும் என்றும் வாதிட்டார்.

மதியம் நடந்த விசாரணையில், சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம், சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என வாதிட்டார்.

 

 

மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும் எனவும் அரியமா சுந்தரம் தெளிவுபடுத்தினார்.

முதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் இருக்கும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது என வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர் நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு நீதிபதி சத்தியநாராயணன் தள்ளிவைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தங்க தமிழ்செல்வனை தொடர்ந்து தினகரனுக்கு அடுத்த ஷாக்!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

தினகரன், தங்க தமிழ்செல்வன் மோதல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்க தமிழ்செல்வன் வெகு விரைவில் அமமுக கட்சியை விட்டு வெளியேறி அதிமுகவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் இணைக்க அமைச்சர் தங்கமணி மூலம் எடப்பாடி காய் நகர்த்தியதாக தெரிவிக்கின்றனர். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகுவது தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

ttv



முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பழனியப்பன் அதிமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த முயற்சியை அமைச்சர் வேலுமணியை வைத்து எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி மாற்று கட்சியில் இணைந்து வருவதால் அமமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தினகரனுக்கு மிக நெருக்கமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திமுக அல்லது அதிமுகவில் இணைவார்கள் என்று தெரிகிறது. இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் தினகரன் ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர். 

Next Story

2016 தேர்தல் முடிவில் அதிமுக -134, திமுக -98... 2019ல்??? எம்.எல்.ஏக்கள் போன பாதை...

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தமிழ்நாட்டிலுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வரும் மே 19 அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. 2016 தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போதைய நிலை வரை முழு விவரங்கள்...
 

tamilnadu assembly
 

2016ம் ஆண்டு 232 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது. அந்தத்தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது. இதில் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். வேறெந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாகக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. சீனிவேல் பதவி ஏற்கும் முன்பே இறந்தார். அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134ல் இருந்து 133 ஆக குறைந்தது. மூன்று காலியிடங்கள் இருந்தன.

 
காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ஆறுமாத இடைவெளியில் இடைத்தேர்தல் வைக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இதனால் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.


அதன்பின் 2016 டிசம்பர் 5 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைந்தது. அதன்பின் 2017 டிசம்பரில் ஆர்.கே. நகர் தேர்தல் நடந்தது. இதில் அறுதிப்பெரும்பான்மையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனால் அதிமுக கூட்டணி 135, திமுக கூட்டணி 98, சுயேட்சை 1 என எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அமைந்தது. அதன்பின் ஓபிஎஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். தர்மயுத்தம், சசிகலா சிறை, தர்மயுத்தம் முடிந்து ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்தது இவையெல்லாம் முடிந்தபின்பு, டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர், தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என புதுக்கட்சி தொடங்கியது என பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.
 

kalaignar jayalalithaa
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர். இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு வந்து, விசாரணை நடைபெற்றுகொண்டிருந்தது, முதலில் விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அவ்வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. மூன்றாவது நீதிபதி ஆகஸ்ட் 31 வரை இரு தரப்பினரையும் விசாரித்துவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார். 
 

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ் காலமானார். அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியானது. அப்போதுவரை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134, திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1, காலியிடங்கள் 2 என ஆனது.



இந்நிலையில்தான், அக்டோபர் 25 அன்று, 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அதிமுக 116, திமுக 97, சுயேட்சை 1(தினகரன்), என்பது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையாகவும், காலியிடங்கள் 20 ஆகவும் ஆனது.


1998ல் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், 2019 ஜனவரி மாதம், 7ம் தேதி அன்று அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 115, திமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1 என்ற நிலையில், 21 இடங்கள் காலியாக இருந்தது. 


மார்ச் 20ம் தேதி கோயம்புத்தூரிலுள்ள சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து அதிமுக 114, திமுக 97, சுயேட்சை 1 என்றானது. தற்போதுவரை 234 தொகுதிகளில், 212க்கு (114+97+1) எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த 22 தொகுதிகளில் 18க்கு தற்போது தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.