Skip to main content

ராவணன் சமாதியில் கதறி அழுது அஞ்சலி செலுத்திய அனுராதா எஸ்.ஐ..!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

Anuradha SI visited Ravanan

 

2020 ஜல்லிக்கட்டு தொடங்கிய அவனியாபுரம் முதல் உலகப் புகழ் அலங்காநல்லூர் வரை களத்தில் நின்று கலக்கிய புதுக்கோட்டை எஸ்.ஐ. அனுராதாவின் காளை ராவணன் பற்றியே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் பேச்சாக இருந்தது. 

 

இந்த காளை ‘ராவணன்’, எஸ்.ஐ அனுராதாவுக்கு எப்படி கிடைத்தது.. அதன் பின்னனி என்ன?

 

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராதா. பளு தூக்கி போட்டியில், காமன் வெல்த் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி வரை நூற்றுக்கணக்கான பதக்கங்களைக் குவித்தவர். அண்ணன் மாரிமுத்து, படிப்பை துறந்து கூலி வேலை செய்து அவரை இந்த அளவுக்கு உயர்த்தினார். விளையாட்டில் சாதித்ததால் தஞ்சை மாவட்டம் தொகூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ .ஆக பணி கிடைத்தது. 

 

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுவந்த அனுராதாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்படித்தான் தஞ்சை நண்பர் சக்தி, தன் தோழியான அனுராதாவுக்காக தஞ்சை வத்திராயிருப்பு பாலச்சந்திரன் கிடையில் இனப்பெருக்கத்திற்காக வைத்திருந்த காளையை வாங்கி அனுராதாவுக்கு பரிசாக வழங்கி, "உனக்கு  இந்தக் காளையும் பெருமை சேர்க்கும் என்று சொல்லி கொடுத்தார்". தன் வீட்டுக்கு வந்த காளைக்கு அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து 'ராவணன்' என பெயர் வைக்க, குடும்ப பெண்களே சேர்ந்து வளர்த்தார்கள். மாரிமுத்து தன் காளையான அசுரனுடன் ராவணனுக்கும் பயிற்சி கொடுத்தார்.

 

அனுராதாவுக்கு பரிசாக கிடைத்த காளை என்பதால், அவரது பெயரிலேயே அவனியாபுரத்தில் முதன்முதலில் களமிறக்கினார்கள். களத்தில் நின்று விளையாடிய ராவணனை அந்தக் களமே பாராட்டியது. ஊடகங்களின் பார்வையும் ராவணன் பக்கம் திரும்பியது. சிறந்த காளை என்ற பெயரோடு வீட்டுக்கு வந்தது.

 

அடுத்த நாள் உலகப் புகழ் அலங்காநல்லூரில் காலை 8.30க்கு அனுராதாவின் ராவணன் களமிறங்கி கலக்கியதும், நாள் முழுவதும் ராவணன் பேச்சு ஓடியது. அலங்காநல்லூரின் சிறந்த காளை ராவணன்தான் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். ஆனால் மாலை அறிவித்தபோது ரசிகர்கள் துவண்டு போனார்கள். காரணம் ஜெர்சி இன காளைக்கு முதல் பரிசும் நாட்டு இன காளையான ராவணனுக்கு இரண்டாம் பரிசும் அறிவித்தார்கள். நாட்டு இனத்தைக் காக்கத்தான் ஜல்லிக்கட்டு போராட்டமே நடந்தது. ஆனால் அரசின் முடிவு கலப்பினத்தின் பக்கம் போகிறது என்ற சர்ச்சை எழுந்தது.

 

ஆனாலும் அந்த வருடம் மட்டுமின்றி இந்த வருடமும் ராவணன் தமிழகத்தின் அத்தனை பெரிய வாடிவாசலிலும் நின்று கலக்கினான். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் முரட்டுச்சோழகன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் நின்று விளையாடிய ராவணன், யாரிடமும் பிடிபடவில்லை. காளையை வளர்த்த மாரிமுத்து கயிறு வீசியும் ஒருவாரமாக பிடிபடாமல் கிராமங்களில் உள்ள காடுகளில் சுற்றியது. இந்தநிலையில்தான், கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு தைலமரக் காட்டிற்குள் பெரிய புற்றைக் கொம்பால் குத்தி உடைத்த நிலையில், அருகிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது.

 

இதுகுறித்து அனுராதாவின் உறவினர்கள் கூறும்போது, “முரட்டுசோழகன்பட்டியில் பிடிபடாமல் தப்பிய ராவணன், பல நாட்கள் காடுகளில் சுற்றியிருக்கிறான். கிள்ளுக்கோட்டை காட்டில் இருந்த புற்றில் நல்லபாம்பு செல்வதைப் பார்த்து, பெரிய உயரமான புற்றைக் கொம்பால் குத்தி உடைத்திருக்கிறது. அப்போது அந்தப் பாம்பு ராவணனை கடித்திருப்பதால் அதே இடத்தில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து போய் தூக்கிவந்து, மாலைகள் அணிவித்து, மனிதர்களுக்குப் போல அத்தனை சடங்குகளும் செய்தோம். காளை ஆர்வலர்களும், காளைபிடி வீரர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாலை அணிவித்துச் சென்றார்கள். சாதித்த காளையை சாவு தேடி வந்தது வேதனையாக இருந்தது. கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருந்தது” என்றனர்.

 

பரிசாக வந்த ராவணன் பரிசுகளை அள்ளிக் குவிப்பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் அதே ரசிகர்கள் வெற்றி மாலைக்குப் பதில் ராவணன் சடலத்திற்கு கண்ணீரோடு மாலை அணிவித்ததைக் காண வேதனையாக இருந்தது. தனது காளை இறந்ததை அறிந்து பாட்டியாலாவில் பயிற்சியில் இருந்த அனுராதா கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

 

ராவணன் உடலைப் பார்க்க வேண்டும் என்று பயிற்சியாளர்களிடம் கெஞ்சியும் கரோனா காரணமாக வர முடியவில்லை. அதனால் வீடியோ கால் மூலம் மாலைகளோடு மாலையாக கிடந்த ராவணன் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்திய அனுராதா, 3 மாதங்களுக்குப் பிறகு விடுமுறையில் ஊருக்கு வந்தவர், நேராக ராவணன் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று கதறி அழுதுவிட்டே வீட்டுக்கு வந்தார்.

 

Anuradha SI visited Ravanan

 

இதுகுறித்து அனுராதா எஸ்.ஐ. கூறும்போது, “ராவணன் எனக்குப் பரிசாக கிடைத்த காளை. எங்களுக்குப் பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்த ராவணனை பலரும் கேட்டார்கள். இறுதிவரை எங்களுடனேயே இருக்க வேண்டும் என்று காளையாக இல்லாமல், பிள்ளையாக வளர்த்தோம். இப்படி பாதியில் போவான் என்று நினைக்கவில்லை. பயிற்சியில் இருந்த என்னால் வர முடியவில்லை. கதறி அழுவதைப் பார்த்து என்னுடன் பயிற்சியில் இருந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள். இப்பத்தான் ஊருக்கு வந்தேன் ராவணன் விதைக்கப்பட்ட இடத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்தினேன். இனிமேல் எங்களிடம் வளரும் ஒவ்வொரு காளையும் ராவணனாகதான் வளரும். ராவணன் என்ற பெயரிலேயே களமிறக்குவோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.