![anti-bribery department conducted a surprise raid at the Registrar's office](http://image.nakkheeran.in/cdn/farfuture/H-VIgqaEPOHYVZTmo6ncg2I3IlGOeEILRX8AAFd1eeA/1718875623/sites/default/files/inline-images/13_134.jpg)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பது, வாங்குவது, பாகப்பிரிவினை ஆகியவற்றுக்கு பத்திரப்பதிவுகள், திருமண பதிவு என தினந்தோறும் பத்திரபதிவுகள் நடைபெற்று வருகிறது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளராக (பொறுப்பு) நித்தியானந்தம் பணிபுரிந்து வருகிறார்.
இங்கு பத்திரப்பதிவு செய்ய அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (19.06.2024) மாலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து உள்ளே இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் அனைவரும் வெளியே செல்ல விடாமல் கதவு சாத்தப்பட்டது. மேலும் வெளியில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியில் இருந்த கேட் மூடப்பட்டது. உள்ளே வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை DSP சங்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து அங்கிருந்த அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் காட்பாடி பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சோதனைக்கு சென்ற போலீசார் அவதி அடைந்தனர். பின்னர் மீண்டும் மின்விளக்கு வசதி வந்தவுடன் சோதனை தொடர்ந்தனர். இந்த சோதனையை கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியது காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.