Skip to main content

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை; சிக்கிய கரன்சி!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
anti-bribery department conducted a surprise raid at the Registrar's office

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலம் விற்பது, வாங்குவது, பாகப்பிரிவினை ஆகியவற்றுக்கு பத்திரப்பதிவுகள், திருமண பதிவு என தினந்தோறும் பத்திரபதிவுகள் நடைபெற்று வருகிறது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தின் சார் பதிவாளராக (பொறுப்பு) நித்தியானந்தம் பணிபுரிந்து வருகிறார்.

இங்கு பத்திரப்பதிவு செய்ய அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று (19.06.2024) மாலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து உள்ளே இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் அனைவரும் வெளியே செல்ல விடாமல் கதவு சாத்தப்பட்டது. மேலும் வெளியில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியில் இருந்த கேட் மூடப்பட்டது. உள்ளே வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை DSP சங்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர்  சோதனை செய்து அங்கிருந்த அதிகாரி  மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் காட்பாடி பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சோதனைக்கு சென்ற போலீசார் அவதி அடைந்தனர். பின்னர் மீண்டும் மின்விளக்கு வசதி வந்தவுடன் சோதனை தொடர்ந்தனர். இந்த சோதனையை கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியது காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை; விடிய விடிய நடந்த சோதனை - சிக்கிய பணம்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
dawn raid by the anti-bribery department at the office of the registrar

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் இரவு 8 மணிக்கு  லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கௌரி  உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே சென்றனர். பின்னர் கதவை தாழிட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் அலுவகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 60,540 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை விடிய விடிய 2 மணி வரை 6 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில் கணக்கில் வராத ரூபாய் 60,540 பறிமுதல் செய்துள்ளதாகவும், இதன் மீதான மேல் நடவடிக்கை உயரதிகாரிகள் எடுப்பதாகக் கூறிவிட்டு சென்றனர்.

இந்தச் சார்பதிவாளர் அலுவகத்தில் கடந்த சில மாதங்களாக போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ததாகவும், ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.