Skip to main content

ஐ.சி.யூவில் மின்தடை? அரசு மருத்துவமனையில் அவலம் - பலியான பெண் 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Annamalai condemns woman passed away in Tiruvarur government hospital

 

மயிலாடுதுறையை சேர்ந்த அமராவதி என்ற பெண்மணி நுரையீரல் பிரச்சனை காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அமராவதிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வெண்டிலேட்டர் மூலர் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. 

 

இந்த நிலையில், நேற்று பிற்பகல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அமராவதி உயிரிழந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அமராவதி உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அமராவதி உயிரிழந்த விவகாரத்தை ஆராய மருத்துவ கல்லூரி, டீன் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை, இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 

 

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாஜக சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்