
'பாமக கட்சியின் தலைவர் பதவி அன்புமணிக்கு இல்லை; இனி நான்தான் தலைவர்' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். 2026 ம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். நீட் தேர்வு என்ற ஒன்று இருக்கக் கூடாது. ஒழிக்கப்பட பட வேண்டும்.
இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது. கோடைகாலம் வந்துவிட்டதால் மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். வடிகட்டி காய்ச்சி குடிக்க வேண்டும். இந்த காலத்திலாவது வீட்டுக்கு ஒரு பத்து மரங்களை வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்'' என்றார்.
முன்னதாக புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாசும், அன்புமணியும் ஒரே மேடையில் மோதல் போக்கில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அன்புமணியின் தலைவர் பதவி திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.