Skip to main content

4 வருடக் காதல்; தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்!

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
After 4 years of love, the bridegroom runs away from the wedding

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர்(29) என்பவர் பெங்களூருவில் உள்ள இரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் அதே வங்கியில் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த 29 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவர, அவர்களும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருத்தணியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று(15.9.2024) காலை இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனையொட்டி நேற்று முன் தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாப்பிள்ளை ஸ்ரீதர் இன்முகத்தோடு பங்கேற்றுள்ளார். இறுதியாக வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, ஸ்ரீதர் இரவு ஓய்வு எடுக்க தனது அறைக்கு சென்றிருக்கிறார்.

அதிகாலை 5 மணிக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், தாலிக்கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஸ்ரீதர் மண்டபத்திலிருந்து மாயமாகியுள்ளார். எங்குத் தேடியும் கிடைக்காததால் சந்தேகமடைந்த பெண் வீட்டார், பெற்றோரின் தூண்டுதல் பேரில் திருமண நேரத்தில் தப்பி ஓடிய மாப்பிள்ளை ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வருடங்களாக காதலித்துவிட்டு திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்