Skip to main content

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
AIADMK MLAs wore black shirts to the Assembly

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய  தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாகத் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

AIADMK MLAs wore black shirts to the Assembly

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துனைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வருகை வந்துள்ளனர். மேலும் அதிமுகவுக்கு 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அக்கட்சி சார்பில் கள்ளச் சாராய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. 

AIADMK MLAs wore black shirts to the Assembly

அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பாமக சட்ட மன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய வழக்கு குற்றவாளி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
illicit liquor case accused flees from police station

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் பகுதியில் சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பியுள்ளார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கும் முயற்சியே திமுகவிற்கு கிடையாது' - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'DMK has no attempt to think about the next generation' - Premalatha Vijayakanth's speech

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்குப் பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''காலையில் எழுந்தவுடன் குடிப்பவர்களைக் குடிகாரன் என்று சொல்லக்கூடாது என ஒரு புதிய விளக்கத்தை அமைச்சர் ஒருவர் சொல்கிறார். காலையில் எழுந்தவுடன் குடிப்பவர்களைக் குடிகாரன் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வார்கள். அமைச்சர் முத்துசாமி அவர்களே உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், தன்மானம் இருந்தால் இந்த 63 பேர் மரணத்திற்கும் நீங்கள் முழுமையாக பொறுப்பேற்று உங்களுடைய மந்திரி பதிவையே ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் மக்களுக்கு செய்யும் நியாயமான செயலாக இருக்கும். இதை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டும். 40க்கு 40 நாங்கள் ஜெயித்து விட்டோம் அதனால் தான் பொறாமையில் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். 40க்கு 40 ஜெயிச்சு என்ன செய்யப் போறீங்க கேண்டினுக்குத்தான் போகப் போறீங்க. கேண்டினில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரபோறீங்க. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து 200க்கு 200, விக்கிரவாண்டி தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட எல்லோரையும் டெபாசிட் இழக்க வைப்பது. இதுதான் இவர்கள் யோசனை. திமுகவிற்கு அடுத்த தலைமுறைகளைப் பற்றி யோசிக்கும் முயற்சியே கிடையாது. அடுத்த தேர்தலை நோக்கித்தான் இவர்கள் ஆட்சி செய்கிறார்களே ஒழிய, இவர்கள் அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டுவிட்டு போவதாக இல்லை'' என்றார்.

படம்:எஸ்.பி.சுந்தர்