
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க சாத்தியமே இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
“கரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை. அரசுப்பள்ளிகளில் 1,6,9 வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும். இரண்டு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 17 ம் தேதி தொடங்கும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடக்கம். ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை நடைபெறும் அன்றே மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள், நோட்டுகள் போன்றவை அனைத்தும் வழங்கப்படும்.
இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க மெட்ரிக் பள்ளி இயக்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.