Skip to main content

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
ADMK legislators fast

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் 60ஐ தாண்டியுள்ள நிலையில், இன்று வரை கள்ளக்குறிச்சி சென்று மக்களைச் சந்திக்காதது ஏன்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவிவிலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம்'-முதல்வர் அறிவிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
'Amendment on Enforcement of Liquor Prohibition' - Notification by the Chief Minister

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்து தமிழக முதல்வர் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு அலுவல்களில் இது குறித்து பேசி வருகிறோம். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கதுறையின் திருத்தச் சட்ட மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்' என தெரிவித்துள்ளார்.  

Next Story

மாநகராட்சி கூட்டத் தொடர்; தி.மு.க.கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
DMK in the Erode Municipal Corporation meeting. Argument between councilors

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில்  நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு முன்னாள் எம்.பி.கணேசேமூர்த்தி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரு நாய்கள் தொந்தரவு குறித்து தடுப்பு நடவடிக்கைகள்,ஊராட்சி கோட்டை குடிநீர் முறையாக சில பகுதிகளுக்கு செல்லாதது, வார்டு பகுதியில் சாலை வசதிகள், சீரமைக்காத பாதாள சாக்கடை காரணமாக சாலை விபத்து மற்றும் ஆழ்துளை கிணற்றில் சாய கழிவு கலந்து சுகாதார சீர்கேடு போன்ற பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண குறித்து மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தடுக்க தவறியதால் 65 -க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும், மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்காததைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து தலைமையில் வெளிநடப்பு செய்தனர். 

அப்போது தமிழக அரசு மீது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகாருக்கு, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையால் ஏற்பட்ட உயிரிழப்பை சுட்டிகாட்டி பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் கோகிலாவாணி பேசும்போது, எனது வார்டுக்கு போதிய தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பேசினார். ஏராளமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனது வார்டில் அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களாகவே வந்து பணிகளைத் தொடர்கின்றனர். இது குறித்து எனக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று பேசினார். இது குறித்து அவர் மேயரிடம் பேசும் போது மற்ற திமுக கவுன்சிலர்கள் அதற்கு பதில் அளிக்கவும் முயன்றனர். அப்போது திமுக கவுன்சிலர் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.