Skip to main content

மனம் திருந்திய மாவோயிஸ்ட்; ஆவின் பாலகம் வைத்துக் கொடுத்த காவல்துறை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

Aavin milk booth -police help

 

கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரைச் சேர்ந்தவர் சந்தியா என்கிற பிரபா. இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி. இயக்கத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவராக இருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு ஒடுக்கப்பட்ட பொழுது தென் மாநிலங்களைக் குறிவைத்து மாவோயிஸ்ட் அமைப்பினர் களமிறங்கினர்.

 

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகப் பகுதிகளின் முக்கிய தளபதியாகச் செயல்பட்டவர் ஷிமோகாவை சேர்ந்த பி ஜி கிருஷ்ணமூர்த்தி. மேற்குத் தொடர்ச்சி மலையே  இவர்களின் செயல் களமாக இருந்தது.

 

2007 முதல் இயக்கத்துக்காகத் தலைமறைவு பணிகளைக் கணவன் மனைவி இருவரும் செய்து வந்தனர். இவர்கள் மீது கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காவல்துறை இவர்களின் தலைக்கு விலை வைத்துத் தேடப்படும் மாவோயிஸ்ட் என அறிவித்து இருந்தது.

 

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கிருஷ்ணமூர்த்தியை கேரளா போலீசார் கைது செய்தனர். தன்னை கர்நாடகா அல்லது கேரளா போலீசார் சுட்டுக்கொன்று விடுவார்கள் எனப் பயந்து 2021 டிசம்பர் மாதம் பிரபா என்கிற சந்தியா தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.  அவரை அரியூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்த கியூ பிரிவு போலீசார் அவருக்கு மாதம் 4 ஆயிரம் வாழ்வாதார ஊதியம் தந்து அவரை பாதுகாத்து வந்தனர்.

 

சந்தியா மனம் திருந்தியதால் அவரின் மறுவாழ்விற்காகத் தமிழக அரசு வேலூர் மாவட்டம் அரியூர்  பகுதியில் ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்து அதற்கான வேலைகளைச் செய்தனர். ஆவின் பூத் தயாரானதும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நவம்பர் 19 ஆம் தேதி துவக்கி வைத்தார்.

 

அப்போது பேசிய அவர், “கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம்  திருப்பத்தூர் மாவட்ட  காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று  சமூக விரோத செயல்கள் மற்றும் அரசுக்கு விரோதமாக ஈடுபட்ட நபர்கள் மனம் திருந்தி வருபவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக கியூ பிரிவு  கண்காணிப்பாளர் கண்ணம்மாள்,  வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்