Skip to main content

7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும் : பாமக வலியுறுத்தல் 

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
7 tamil


 


பாமக பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 

தீர்மானம் 1 : வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு மறைவுக்கு இரங்கல்
 

வன்னியர் சங்கத்தின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மாவீரன் ஜெ.குரு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்  கடந்த மே மாதம் 25&ஆம் தேதி காலமானார். அவரது மறைவு பா.ம.க.வினருக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.
 

மாவீரன் குரு மீது மருத்துவர் அய்யா அவர்கள் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். மருத்துவர் அய்யா மீது மாவீரன் குரு மிகுந்த மரியாதையும், விசுவாசமும் கொண்டிருந்தார். ‘மரணம் மட்டுமே மருத்துவர் அய்யாவிடமிருந்து தம்மை பிரிக்கும்’ என்று முழங்கி மருத்துவர் அய்யா அவர்கள் மீது தாம் கொண்டிருந்த மரியாதையையும், பற்றையும் வெளிப்படுத்தினார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை தமிழக  முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் நமது லட்சியம்; அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மாவீரன் குரு அவர்கள், அதற்கேற்றவாறே செயல்பட்டு வந்தார்.

 

மாவீரன் குருவுக்கு உடல் நலம் பாதித்தது தெரிந்ததுமே மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் துடித்துப் போனார்கள். அவருக்கு உலகத்தர மருத்துவம் அளிக்க  நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கடுமையாக போராடியும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
 

மாவீரன் குரு அவர்களின் மறைவுக்குப் பிறகு அவருக்கு திரு உருவச்சிலை திறப்பு, சட்டக்கல்லூரி வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டல் என்று தொடர்ந்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்து நினைவு மணிமண்டபம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் அன்பையும், பாட்டாளி மக்கள் கட்சியினரின் பாசத்தையும் பெற்றிருந்த மாவீரன் குரு அவர்களின் மறைவு அனைவரையும் பாதித்திருக்கிறது. அவரது மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 
 

தீர்மானம் 2 : மேகதாது அணை குறித்த ஆய்வுக்கான அனுமதியை திரும்பப்பெற வேண்டும்
 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைத் தயாரிக்கத் தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானதாகும்.
 

 

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும் ஆபத்துள்ளது.

 

 

அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அணை கட்டுவது உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளுக்கு எதிரானது ஆகும். அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை; ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கம் மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு, ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும்.


 

எனவே, மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 3 : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்!

 

காவிரி நீர்ப்பகிர்வு குறித்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக நீண்ட போராட்டத்துக்குப்  பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஆணையத்துக்கு இன்னும் முழுநேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை. 
 

 

அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சமான ‘அணைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம்’ காவிரி ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் காவிரியில் அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைத்ததால் நீர்ப்பகிர்வில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஒருவேளை வரும் ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை  பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம்  நிறைவேற்ற மறுத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காவிரி பிரச்சினையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி தமிழகம் பெற்ற உரிமைகள் பயனற்றுப் போய்விடும்.
 

 

எனவே, காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு முறையாக கிடைப்பதை  உறுதி செய்யவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் கையாளும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன், காவிரி ஆணையத்திற்கு உடனடியாக முழுநேரத்   தலைவரை நியமிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

 தீர்மானம் 4. கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு  உடனடியாக வழங்க வேண்டும்!

 

 

காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் தாக்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகும் நிலையில், பாதிக்கப் பட்ட பகுதிகளில் இன்று வரை இயல்பு நிலைமை திரும்பவில்லை. கிராமப் பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. வீடுகளை இழந்த மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 
 

 

மற்றொருபுறம் மத்திய அரசிடம் முதற்கட்டமாக தமிழக அரசு கோரிய ரூ.15,000 கோடி நிதியில் ஒரு பைசா கூட இன்னும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு நவம்பர் 27&ஆம் தேதியே ஆய்வை முடித்து விட்டது. அதன்பின் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை மத்தியக் குழு அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை. மத்தியக் குழு எப்போது அறிக்கை தாக்கல் செய்யும்; எப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும் எனத் தெரியவில்லை.

 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் தங்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இவ்வளவு தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட மறுவாழ்வுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கோருகிறது.
 

தீர்மானம் 5: உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்! 
 

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரப் பாதைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் உழவர்களின் அனுமதி பெறாமல், உழவர்களின் விளை நிலங்களில் நுழைந்து அளவீடு செய்வது அரச அத்துமீறலாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
 

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரமும், அதற்காக மின்பாதைகளும் அவசியம் ஆகும். ஆனால், அதற்காக உழவர்களில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, வாழ்வாதாரங்களை பறிப்பது நியாயம் அல்ல. இத்தகைய மின்பாதைகள் கேரளத்தில் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 6: கொங்கு மண்டலத்தில்  தொழில்துறையினருக்கு  ஊக்குவிப்புத் திட்டம் தேவை! 
 

தமிழகத்தின் தொழில் தலைநகரமாக திகழ்வது கோவை ஆகும். கோவை, திருப்பூர் மற்றும் அவற்றை ஒட்டிய கொங்கு மண்டலப் பகுதிகளில் இல்லாத தொழில்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து தொழில்களும் இப்பகுதியில் நடைபெறுகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மோட்டார் பம்ப் தேவையில் 50 விழுக்காடும்,  கிரைண்டர் தேவையில் 90 விழுக்காடும் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. 15 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி  மூலம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் என அனைத்து வகையான தொழில்களும் கொங்கு மண்டலத்தில் நடக்கின்றன.

 

ஆனால், பல்வேறு காரணங்களால் அனைத்துத் தொழில்களும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து  வருகின்றன. இதே நிலை நீடித்தால் கோவை, திருப்பூருக்கு சென்றால் வேலை தேடி பிழைத்துக் கொள்ளலாம் என்றிருந்த நிலை மாறி, கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கே வேலை இல்லை என்ற நிலை உருவாகி விடும். தேவையான கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.  கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது, அதைப் போக்கி தொழில்துறையை முன்னேற்ற ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், இப்போதும் கோவை மண்டலத் தொழில் வளர்ச்சிக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் புத்தாண்டில் அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 7:  ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதைத் தடுக்க சட்டப்பேரவையில் தனிச் சட்டம்!

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை நியாயமற்றது; ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 29-ஆம் தேதி தமிழக அரசு ஆணையிட்ட போதே அது வலிமையானது அல்ல; மக்களை ஏமாற்றுவதற்காக ஆலையை மூட உத்தரவிடுவது போல தமிழக அரசு நடிக்கிறது; தமிழக அரசின் இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்காது என்று மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் எச்சரித்திருந்தனர். அவர்கள் கூறியது தான் இப்போது உண்மையாகியுள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழக அரசு, அதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை போக்கவே ஆலையை மூடுவது போன்ற நாடகத்தை நடத்தியது. இப்போதும் கூட பசுமை தீர்ப்பாயத்தின்  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறும் தமிழக அரசு, அங்கு வழக்கை வலுவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது. தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது சட்டம் இயற்றி அதனடிப்படையில் இந்த வழக்கை எதிர்கொள்வது தான் சரியாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.
 


தீர்மானம் 8 : சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

 

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் தமிழகத்திற்கு தேவையற்றது என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக 7000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் பத்தாயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து சொந்த ஊரில் அகதிகளாக வாழ நேரிடும் என்று எச்சரித்த  பா.ம.க, இச்சாலைத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் கருத்துக்கேட்பு, போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தியது. எனினும் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் அரசுகள் உறுதியாக இருந்ததால், அத்திட்டத்திற்கு எதிராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்த வழக்கில், பசுமைச் சாலைத் திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  ஆனால், அதன்பிறகும் நிலங்களைக் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. பசுமைச்சாலையை அமைத்தே தீருவோம் என்று தமிழக முதலமைச்சர் முழக்கமிட்டார். இவற்றையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன்பயனாக இந்த வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனைக் காக்க மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு இந்தப் பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வழக்கில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
 

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில், நான்காவதாக இந்த பசுமைச்சாலை அமைப்பதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அதேநேரத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். இந்த உண்மையை உணர்ந்து, பிடிவாதம் பிடிக்காமல், சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை  கைவிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 9: உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த  வேண்டும்
 

தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் பல முறை கண்டிப்புடன் கூறியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

 

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து உடனுக்குடன் முடிவெடுத்து செயல்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், நிதிக்குழு பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான ரூ.850 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.5000 கோடி நிதி முடக்கப் பட்டுள்ளது.  இதனால் உள்ளாட்சிகளில் அன்றாட செலவுகளுக்குக் கூட நிதியில்லாத நிலை உருவாகியுள்ளது.

 

நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி சீரமைப்புப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில்,  உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி பா.ம.க கேட்டுக்கொள்கிறது.
 

தீர்மானம் 10: நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  ஏற்கனவே 3 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஆண்டுக்கு 28.50 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதுவே தேவைக்கும் அதிகம் எனும் நிலையில், இப்போது சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது சுரங்கத்தை அமைக்க என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்து, அதற்காக 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேவையற்ற  இச் சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களால் 26 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பர்.

 

என்.எல்.சி. நிறுவனம் தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. எதிர்காலத் தேவைக்காக 10,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் தரும் நிலங்களை  உழவர்களிடமிருந்து பறிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, புதிய சுரங்கத்திற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும். மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கைப் பேரிடர் தடுப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சுரங்கம் -3 அமைக்கும் திட்டத்தையும், அதற்காக நிலங்களை பறிக்கும் முடிவையும் என்.எல்.சி நிறுவனம் அடியோடு ரத்து செய்ய வேண்டும்.
 

தீர்மானம் 11: அத்திக்கடவு - அவினாசி உள்ளிட்ட பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அத்திக்கடவு - அவினாசி திட்டம் ரூ.3523 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.1532 கோடிக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதால், திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமோ? என்ற ஐயம் உழவர்களிடையே எழுந்துள்ளது. பொதுப்பணி துறைக்குரிய 31 ஏரிகள், பஞ்சாயத்துக்கு உட்பட்ட 40 குளங்கள், 538 குட்டைகள் ஆகியவற்றை நிரப்பும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட  உழவர்கள் குழுக்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் விருப்பப்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 

 

அத்துடன், ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் பாண்டியாறு - புன்னம்புழா, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆகிய பாசனத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இவை தவிர மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மைத் திட்டம், மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், சேலம் மாவட்டத்தில் தோனி மடுவு பாசனத் திட்டம், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம், தருமபுரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் பாசனத்திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களையும், பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின்  சிறப்பு பொதுக்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 

 

தீர்மானம் 12 : காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்!

 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அறியப்பட்ட காவிரி படுகையை இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலமாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மீத்தேன் எரிவாயுத் திட்டம், பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் கிணறுகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 149 எண்ணெய்க் கிணறுகள், எரிவாயு வயல்களை தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

 

தனியார் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் எந்த வரையறைக்கும் கட்டுப்படாமல் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டும் என்பதால் காவிரிப் படுகையில் பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படக்கூடும். ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் இந்த வயல்கள் இருந்தால் எவ்வளவு காலத்தில்  காவிரிப் படுகை பாலைவனமாகுமோ, அதில் பாதி காலத்தில் இப்போது பாலைவனமாகும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிற்சாலைகளையும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக காவிரி பாசன மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை வரும் 02.01.2019 அன்று தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கோருகிறது.
 


தீர்மானம் 13:  7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும்

 

 

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஐந்தாண்டுகளாக  வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது.

எழுவர் விடுதலை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்  161-ஆவது பிரிவின்படி மாநில அரசே அவர்களை விடுதலை செய்து கொள்ளலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதே மாதத்தின் 9-ஆவது நாளில் எழுவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அத்தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 113 நாட்களாகி விட்டன. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுனர் மாளிகை இதுவரை முடிவெடுக்காதது தமிழக மக்களிடம் அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுனருக்கென தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவது தான் அவரது கடமை. 

 

எனவே, 7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று 7 தமிழர்களையும் புத்தாண்டில் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 14:  தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்
 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகத் தீமையாக மது உருவெடுத்துள்ளது. மதுவால் தமிழகத்தில் ஆண்டு  தோறும் 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 16,000 பேர் உயிரிழக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் மன நோய்க்கு ஆளாகின்றனர். இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு முடிவு கட்டுவதற்காகத் தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்துடன் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்கடைகளை மூடியது.
 

ramadoss



ஆனால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, மதுக்கடைகளை மூடாமல், மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் மது விற்பனையும், மது வருவாயும் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கேடு ஆகும். இந்த உண்மையை உணர்ந்து  தமிழ்நாட்டில் வரும் தைத் திருநாள் முதல் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது. 

 

தீர்மானம் 15:  ஊட்டி உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தைக் கைவிடுக!

 

 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள முத்தோரையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு முடிவு செய்திருக்கிறது.1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய உருளைக்கிழங்கு நிறுவனம் தென்னிந்தியாவில் உருளை சாகுபடியை பெருக்குவதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. உருளைக்கிழங்கு  விளைச்சலை பாதிக்கும் நூற்புழு தாக்குதல், இலைக்கருகல் நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட குப்ரி கிர்தாரி, குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரி சக்யாத்ரி ஆகிய உருளைக்கிழங்கு வகைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. 
 

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயிரிடுவதற்கு  ஏற்ற விதை உருளைக்கிழங்குகளை இந்த நிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் மூடப்பட்டால்  தமிழகத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தாலும் உருளைகள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இழப்பு தான் ஏற்படும்.  ஒவ்வொரு பயிருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டால் போதுமானது என்ற அடிப்படையில் ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடும் மத்திய அரசின் முடிவு தவறானது. தென் மாநிலங்களில் லாபகரமான உருளை சாகுபடிக்கு ஊட்டி முத்தோரை மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆதாரம் ஆகும். 
 

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில விவசாயிகளின் நலன் கருதி ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு  கோருகிறது.
 

தீர்மானம் 16:  போர்க்குற்றம்: இலங்கையை தண்டிக்க ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருக!
 

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்கள் இன்னும் தொடருகின்றன. இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைய விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
 

அடுத்தக்கட்டமாக போர்க்குற்றங்கள் இழைத்தவர்களை நீதிமன்றக் கூண்டுகளில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரும்படி இலங்கைக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையிட்டது. அதற்காக காலக்கெடு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது. ஆனால், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை இலங்கை அரசு மேற்கொள்ளாத நிலையில், அது குறித்த அறிக்கையை, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில் ஆணையர் தாக்கல் செய்யவிருக்கிறார்.
 

அந்தக் கூட்டத்தில், ‘‘இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்-இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் ( International Criminal Court ) விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க பொதுக்குழு கோருகிறது.
 

தீர்மானம் 17:  2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக கடைபிடிக்க உறுதி!
 

2017-ஆம் ஆண்டு இதே நாளில்  மதுரையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 2018-ஆம் ஆண்டை இளைஞர்கள் எழுச்சி ஆண்டாக கடைபிடிக்க  தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாட்டாளி இளைஞர்கள் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசியல் பயிற்சிகள் வழங்கப் பட்டன. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த அவர்கள் தயாராகியுள்ளனர்.
 

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் சிங்கப்பூர், சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாகவே தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளில், கல்வி, தொழில்துறை, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அந்த நாடுகள் எட்டிய வளர்ச்சியில் 10 விழுக்காடு அளவுக்குக் கூட தமிழகத்தால் முன்னேற்ற முடியவில்லை.
 

இதற்கான காரணங்களில் முக்கியமானவை தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், தொலைநோக்குப் பார்வையற்ற ஆட்சித் தலைமைகள், மக்கள் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை மது, இலவசங்கள், திரைப்படம் ஆகியவற்றுக்கு அடிமையாக்கி வைத்தது ஆகியவை தான். இத்தீமைகளை ஒழித்தால் மட்டுமே தமிழகத்தை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக முன்னேற்ற முடியும்.
 

இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக கடைபிடிக்கவும் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் பயிலரங்குகள், கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு உறுதியேற்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
pmk election manifesto release

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் பா.ம.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

சமூக நீதி

* 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.

* உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.4

* தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்கப்படும்.

* கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

* தனியார் துறை, நீதித் துறை ஆகியவற்றிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும்.

* மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

* தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடைநிலைப் பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

மாநிலத் தன்னாட்சி

* மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும்.

*  நெருக்கடி நிலைக் காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு

*  மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.

* ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50%&ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*  உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.

* தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

*  மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைச் சட்டம்

*வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும். அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. வலியுறுத்தும்.

*உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும்.

*  ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை.

* அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வசதியாக புதிய ஆணையம்.

* 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை

* மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

* சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு மானியம் ரூ.6,000&லிருந்து ஏக்கருக்கு ரூ.10,000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும்.

* வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி.

* பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 இலட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி.

* நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மைக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

*தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டுவதன் மூலம் உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம்

*  தொழில் திட்டங்களுக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.

*  கடலூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.

* என்.எல்.சி. 3ஆவது சுரங்கம் மற்றும் முதல், 2ஆம் சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு தடை.

* குறிப்பிட்ட காலத்திற்குள் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை.

* மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

அணுஉலை இல்லா தமிழகம்

* தமிழ்நாட்டை அணுஉலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கால அட்டவணை வெளியிடப்படும்.

* காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நதிகள் இணைப்புத் திட்டம்

*புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாட்டின் நலனுக்காகக் கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

* தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கொண்ட ரூ. 1 இலட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசனப் பெருந்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.

மேகதாது அணைக்குத் தடை

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டக் கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும்.

* முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரியின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசின் மூலமாக பா.ம.க. தடுத்து நிறுத்தும்.

தமிழக ஆறுகள் தூய்மைப்படுத்துதல் திட்டம்

* தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு நச்சுக் கழிவுகள் கலப்பால் முழுமையாகச் சீரழிந்திருக்கிறது. தாமிரபரணி ஆற்றைச் சீரமைத்து அதன் பழைய நிலைக்கு மீட்டுருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை, நொய்யல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நதிகளையும் தூய்மைப்படுத்தவும், கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் 3 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

* இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் 30 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தமிழ்நாட்டில்  உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 இலட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளில் 20 இலட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டுத் தொழிற்பயிற்சி வழங்கப்படும். 10 மாதப் பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும்.

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 3 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியு-தவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

* சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும், கடனுதவியும், தேவையான பிற வசதிகளும் கிடைப்பதற்கும் பா.ம.க. பாடுபடும்.

மகளிருக்கு மாதம் ரூ.3,000

* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

* மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.

* விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் மானிய விலையில் வழங்கப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை இப்போதுள்ள 33 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தவும், அதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றவும் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

*  மத்திய அரசால் வழங்கப்படும் கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால மருத்துவ உதவி தற்போதுள்ள 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

குழந்தைகளுக்கான நீதி

* பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக ரூ.10 இலட்சம் வைப்பீடு.

* 18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகள் என்று அறிவிக்கப்படுவார்கள்.

* பெண் குழந்தைகளுக்காக தனி விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.

* குழந்தைகளுக்கு ஆளுமைக் கல்வி, இணையப் பாதுகாப்புக் கல்வி வழங்கப்படும்.

* ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், 8ஆவது ஊதியக்குழு

* அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பாமக வலியுறுத்தும்.

* மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்துப் பரிந்துரைக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்படும்.

* அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 10% ஆண்டு வட்டி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* சமவேலைக்குச் சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய & மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.

கல்வி

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

* வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படுவது போன்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை, முழுக்க முழுக்க அரசின் செலவில் இலவசமாக வழங்க பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்யும்படி, மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* தொலைதூரங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆசிரியர் குடியிருப்புகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.

உயர் கல்வி

* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும்.

* மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் மாணவர் ஆணையங்கள் அமைக்கப்படும்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு

* நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.

* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்.

அனைவருக்கும் இலவச மருத்துவம்

* இந்தியாவில் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரையும் சேர்ப்பதன் மூலம் இந்த இலக்கு எட்டப்படும்.

*அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் அறுவைச் சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணிநேர அவசர முதலுதவி தரும் மருத்துவமனைகளாகப் படிப்படியாகத் தரம் உயர்த்தப்படும்.

* சென்னையில் ரூ.1000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையத்தை அமைக்கப் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடையில்லை

* இந்தியாவில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்துள்ள தடை நீக்கப்படும்.

* தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 300 புதிய மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அரசுகளுடன் இணைந்து தொடங்கப்படும்.

* நாடு முழுவதும் பொதுமக்கள் அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து கூட்டுறவு முறையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும்.

* கூட்டுறவு முறையில் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்கள், அவற்றை உருவாக்கிய பொதுமக்கள் நல அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை.

* பொதுச் சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும்.

*மத்திய அரசின் அனைத்துச் சேவைகளையும் சான்றிதழ்களையும் இணையம் வாயிலாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும்

* இந்தியாவின் கடலோர மாநிலங்கள் அனைத்திலும் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு வலுப்படுத்தப்படும். அம்மாநிலங்களில் மாநில அரசு, மாநிலக் காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* போதை மருந்துக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.

* போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலங்களுக்கு மதுவிலக்கு மானியம்

* இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ள பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசை வழங்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* புகையிலைப் பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நோக்குடன் 100% தீமை வரி விதிக்கப்படும்.

ரூ.10 இலட்சம் வரை வரி இல்லை

* தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* ரூ.7 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 5% வரி வசூலிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 87ஆவது பிரிவின்படி ரூ.15,000 வரை வரி தள்ளுபடி அளிக்கப்படும் என்பதால், ரூ.10 இலட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.

* ரூ.10 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.20 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருவாய்க்கு 30% வரி வசூலிக்கப்படும்.

* ரூ.1 கோடிக்கும் கூடுதலான வருவாய்க்கு 50% வரி வசூலிக்கப்படும்.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு

* இந்தியாவில் தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. இதை 2 அடுக்குகளாகக் குறைக்க பா.ம.க. வலியுறுத்தும்.

* புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 10%, 25% என்ற அளவில் இருக்கும்.

* இன்றைய நிலையில் 5% ஜி.எஸ்.டி. விகிதத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

* மது, புகையிலை உள்ளிட்ட மனித குலத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் பொருட்கள் ஜி.எஸ்.டி.  வரம்பிலிருந்து நீக்கப்படும். இவற்றுக்கு 100% வரை தீமை வரி வசூலிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு

* பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக மட்டும் ரூ.50க்கும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இவை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் போது லிட்டருக்கு ரூ.20 வரை குறையும்.

* தங்கம் மீதான 15% இறக்குமதி வரி முற்றிலுமாக இரத்து செய்யப்படும். அதனால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,000 வரை குறையும்.

தொழில்துறை வளர்ச்சி

* இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

* இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும்.

* வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் சிறப்பான தொழில் கொள்கையை வகுத்து செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவிகளை வழங்கும்.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க முன்வருவோருக்கு குறைந்த விலையில் நிலம், மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

* தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கூட்டாக இணைந்து தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில், அவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு மானியமும் வழங்க பா.ம.க. பாடுபடும்.

* வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் சொந்த மாநிலங்களில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ரோபோடிக் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் திறன், இணைய உலகம், தானியங்கி வாகனங்கள், முப்பரிமாண அச்சுமுறை, குவாண்டம் கணினியியல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நான்காவது தொழில் புரட்சியை இந்தியாவில் விரைவுபடுத்த பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* நான்காவது தொழில் புரட்சி காரணமாக, வேலையிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, உயர்கல்வி மற்றும் பயிற்சிகளில் மாற்றம் செய்யப்படும்.

* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடி தேவைப்படும். இதைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து திரட்டுவதற்கு உதவவும், இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மானியமாக வழங்கவும் மத்திய அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* சென்னையில் இருந்து திருச்சி வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை இப்போது செங்கல்பட்டு வரை 8 வழிச் சாலையாகவும், திண்டிவனம் வரை 6 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இச்சாலை முழுவதும் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதுடன், அதன்மீது திண்டிவனம் வரை 6 வழி உயர்மட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்வண்டித் திட்டங்கள்

* மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் இடைவிடாத முயற்சியால், அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட தருமபுரி & மொரப்பூர் இடையே புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை ஓராண்டில் நிறைவேற்றி முடிக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்காததால் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அனைத்துத் தொடர்வண்டித் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து செயல்படுத்தி முடிக்கப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையோரத் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்திற்குப் புத்துயிரூட்டப்படும். முதல் கட்டமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாகக் கடலூர் வரை புதிய பாதை அமைக்கப்படும்-.

மின் திட்டங்களுக்கு நிதியுதவி

* தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான அனல்மின் திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றைச் செயல்படுத்தப் பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

* தமிழகத்தில் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் மூலம் வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றுத்தருவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு

* தமிழக மீனவர்கள் சிக்கள கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்.

* இந்திய & இலங்கை கூட்டுப்பணிக் குழு மூலம் பேச்சு நடத்தி, இந்திய & இலங்கை கடல் எல்லையில் இருதரப்பு மீனவர்களும் முறைவைத்து மீன்பிடிக்கும் நடைமுறை உருவாக்கப்படும்.

* 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.

தமிழ் ஆட்சிமொழி

* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பா.ம.க. பாடுபடும்.

* உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரச்சார சபாவுக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

திருக்குறள் தேசிய நூலாக்கப்படும்

* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, அந்த முயற்சியில் வெற்றி பெறுவோம்.

* மாணவர்களின் மனம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மாநில அரசின் மூலமாக தஞ்சாவூரில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க பா.ம.க. பாடுபடும்

பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றம்

* தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மனித வாழ்நிலை குறியீட்டின் அடிப்படையில், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்கள் அடையாளம் காணப்படும். அந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* மாநிலத்திற்கு உள்ளேயே நிலவும் வேறுபாடுகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் சரிசெய்ய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்படி பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக 371 (ரி) என்ற தனிப்பிரிவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க பா.ம.க. பாடுபடும்.

உள்ளாட்சி & கிராமப்புற வளர்ச்சி

* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசும், மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் போன்று கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. பாடுபடும்.

* மதுவிலக்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி மதுவிலக்குச் சட்டம் இயற்றவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளோ, வேறு திட்டங்களோ செயல்படுத்தப்படுவதாக இருந்தால், அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி

* இலங்கை போர் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* ஈழத் தமிழர்களுக்கு தாயகமாக தமிழீழத்தை அமைப்பது குறித்து ஐ.நா. மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.

* தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில், மத்திய அரசை வலியுறுத்தி அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும்.

வெளிநாடுவாழ் தமிழ் நலன்

* அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* வளைகுடா நாடுகளில் கடைபிடிக்கப்படும் புதிய கொள்கை காரணமாக, வேலை இழக்கும் தமிழர்களுக்கு மாற்றுவேலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

* தேர்தல்களில் மக்கள் அளிக்கும் வாக்குகள் வீணாகப் போவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அது பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதித்துவம்  கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகம் செய்யப்படும்.

* தேர்தல்களில் பண பலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.

* மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாகவும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்த, பிற மாநிலப் பிரிவுகளைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றங்களை செய்ய பா.ம.க. பாடுபடும்.

* வாக்குச் சாவடிகளின் தலைமை அதிகாரிகளாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் வகையில், தேர்தல் விதிகள் திருத்தியமைக்கப்படும்.

விளையாட்டு

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மறுசீரமைக்கப்படும்.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக அந்த விளையாட்டில் சாதனை படைத்த முன்னாள் விளையாட்டு வீரர் ஒருவர் அமர்த்தப்படுவார்.

* மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன், பாடத்திட்டங்களில் விளையாட்டும் சேர்க்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு பாடவேளையை விளையாட்டுக்கு ஒதுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. வலியுறுத்தும்.

பன்முகத் தன்மை

* இந்தியாவில் வாழும் பல்வேறு இன, மத, மொழி பேசும் மக்கள் அனைவரும் அவரவர் பண்பாட்டு, கலாச்சார, மொழி உரிமைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும், அனைவரும் முழு மனித உரிமையுடன் வாழும் சூழலை உருவாக்கவும் பா.ம.க. பாடுபடும்.

* இந்து திருமணச் சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளைக் களையவும், பாலினப் பாகுபாட்டை அகற்றவும், குழந்தைகள் உரிமைகளைக் காக்கவும் பா.ம.க. பாடுபடும்.

சிறுபான்மையினருக்கு மக்கள்தொகைப்படி இடஒதுக்கீடு

* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யவேண்டும் என்று பா.ம.க. கேட்டுக்கொள்ளும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்இடஒதுக்கீடு

* பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையம் அதன் அறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்திருக்கிறது. ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும்படி, மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக வலியுறுத்தும்.

* மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைப் பணிகளிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடும்படி மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதைப் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிசெய்யும்.

* தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ & மாணவியர்கள் கல்வி உதவித் தொகைக்கான நிதி ஒதுக்கீடு 50% அதிகரிக்கப்படவேண்டும் என்று பாமக வலியுறுத்தும்.

* அரசுத் துறையில் நிரப்பப்படாத பணியிடங்களைச் சிறப்புப் பணி நியமனங்கள் மூலமாக நிரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

புதுவைக்கு மாநிலத் தகுதி

*  புதுவை யூனியன் பிரதேசத்திற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசைப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

* புதுவைக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும் போது, மத்திய அரசுக்கு அம்மாநிலம் வழங்கவேண்டிய கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய பா.ம.க. வலியுறுத்தும்.

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.