Skip to main content

’60 லட்சம் அபராதம் என்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது’-கே. பாலகிருஷ்ணன் 

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

 

kb


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


’’தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்டு மாதம் 18ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அந்தோணி, ரூபின்சன், வில்பர்ட், ரமேஷ், ஆரோக்கியம், பாக்கியம், வினோத் உள்பட 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, படகுகளையும் பறிமுதல் செய்த வழக்கில், இலங்கை கல்பட்டி நீதிமன்றம், மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது, சிறைபிடிக்கப்படுவது, உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவது, சேதப்படுத்தப்படுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சொல்லொணா துயரங்களில் மீனவர்கள் மூழ்கி வரும் நிலையில், இலங்கை அரசு கொண்டு வந்த புதிய கடல் தொழில் சட்டத்தின் படி 8 மீனவர்களுக்கும் தலா ரூ. 60 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.  இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதே பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததன் விளைவாகவே இத்தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன.

எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை ரத்து செய்வதோடு, எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமெனவும்; அவர்களது படகுகள் மற்றும் உடமைகளையும் பத்திரமாக மீட்டெடுத்து தமிழகம் அழைத்து வருவதற்கும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டுமெனவும்; தமிழக அரசும் இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

மேலும் 10 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு பிறகு, ராமேசுவரத்தில் இருந்து 16.10.2018 அன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக 7 குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்துள்ளதாக வந்துள்ள செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.   எனவே தமிழக மீனவர்களின் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு, இலங்கை அரசுடன் ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.