
திருச்சி மாவட்டம், லால்குடி நெய்குப்பைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா(43). இவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அவருடைய கணவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், 5ஜி டவர் அமைக்க தங்களுடைய நிலம் தொடர்பான ஆவணங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதோடு முதல் தவணையாக 5,100 ரூபாய் பணம் அனுப்பவும் என்று தெரிவித்துள்ளனர். விஜயாவின் கணவரும் பணத்தை அனுப்பி உள்ளார். அதனைத் தொடர்ந்து மற்றொரு எண்ணில் இருந்து வந்த மர்ம அழைப்பில் முதலில் 28,500 ரூபாயும், அடுத்ததாக 48,600 ரூபாயும் போன் மூலம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதன்படி அவர்களும் அனுப்பி உள்ளனர். அதனைத் தொடர்ந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அனுப்ப வேண்டும் என்று கூறியதையடுத்து எழுந்த சந்தேகத்தால் விஜயா மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.