Skip to main content

டிரைவரின் புத்திசாலித்தனத்தால் மீட்கப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள டேங்கர் லாரி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

40 lakh worth of oil and tanker truck recovered by driver's ingenuity

 

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து பெட்ரோலியம் கம்பெனியின் லாரி ஒன்று, 20 ஆயிரம் லிட்டர் (வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயில்) இன்ஜின் ஆயிலை நிரப்பிக்கொண்டு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிதென்னல் என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்றது. அந்த ஆயிலைக் கொண்டு வருவதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட லாரியை மதுரை பகுதியைச் சேர்ந்த விமல் காந்தன் என்பவர் ஓட்டிவந்தார். இதனையடுத்து, கண்டமங்கலம் அருகே உள்ள சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனிக்கு அருகே லாரி வந்துகொண்டிருக்கும்போது, அங்கு திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் லாரியை வழிமறித்து நிறுத்தி, தான் ஒரு போலீஸ் என்று கூறி லாரியை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

உண்மையான போலீஸ் என நம்பிய லாரி டிரைவர், டேங்கர் லாரியை நிறுத்தியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திகொண்ட அந்த மர்ம நபர், லாரி டிரைவரை  மிரட்டி அவரும் லாரியில் இருந்தபடியே டேங்கர் லாரியை கடத்திச் சென்றுள்ளார் மர்ம நபர். அப்போதுதான் இவர் உண்மையான போலீஸ் அல்ல என்பது டிரைவர் விமல் காந்தனுக்கு புரிந்தது. இந்நிலையில், அந்த லாரி மதகடிப்பட்டு அருகே வந்தபோது அந்த மர்ம நபரின் கூட்டாளிகள் இருவர் டேங்கர் லாரியில் ஏறிக்கொண்டனர். பின்னர், விழுப்புரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்த ஒரு தனியார் ஓட்டலின் அருகே டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு அதில் நிரப்பப்பட்டிருந்த இன்ஜின் ஆயிலை விற்பனை செய்வது தொடர்பாக அந்த மூன்று பேரும் ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட லாரி டிரைவர் விமல் காந்தன், நைசாக போலீசாருக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே விக்கிரவாண்டி போலீசார் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

தங்கள் அருகே போலீசார் வேகமாக வருவதைக் கண்டதும் அந்த மூன்று மர்ம நபர்களும் லாரியையும் டிரைவரையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார், லாரி கடத்தப்பட்ட இடம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ளதால், கண்டமங்கலம் போலீசாரிடம் லாரியையும் டிரைவரையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரிஷாந்த் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியைக் கடத்தியது தெரியவந்தது. மேற்படி மூன்று பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள். டேங்கர் லாரி டிரைவர் விமல் காந்தன் சமயோசிதமாக போலீசாருக்குத் தகவல் அளித்ததும் விரைந்து போலீசார் வந்ததால் 40 லட்சம் மதிப்புள்ள ஆயில் மற்றும் டேங்கர் லாரியை மீட்க முடிந்தது என்கிறார்கள் போலீசார். இந்தக் கடத்தல் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.