Skip to main content

கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக பெண் உள்பட 3 பேர் கைது!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

3 arrested for circulating Color Xerox banknotes

 

கிருஷ்ணகிரியில் போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாக பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் வேலு (57). இவர், பழைய மாவட்டக் கிளைச்சிறை செல்லும் சாலையில் கருவாடு கடை நடத்திவருகிறார். இவருடைய கடைக்கு ஜூன் 8ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் ஆணும், பெண்ணும் வந்திறங்கினர். அவர்கள் வேலுவிடம் 200 ரூபாய் தாளைக் கொடுத்து, 50 ரூபாய்க்கு கருவாடு வாங்கினர். அந்த ரூபாய் தாளை தொட்டுப் பார்த்தபோது, அது போலி ரூபாய் தாளாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார் வேலு. உடனே அவர், இது கள்ள ரூபாய் நோட்டு போல இருக்கிறது. வேறு நோட்டு கொடுங்கள் என்று கேட்டுள்ளார். 

 

ஆனால் அவர்களோ வேறு ரூபாய் தாளை மாற்றிக்கொடுக்காமல் சில்லரையும் வாங்காமல், கருவாடுடன் பக்கத்துக் கடைக்குச் சென்றுவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த வேலு, இதுகுறித்து அங்கு ரோந்து சுற்றிவந்த காவலர் முருகனிடம் புகார் அளித்தார். இதையடுத்து காவலர் முருகன், சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த அந்த ஆண், பெண் இருவரையும் பிடித்து விசாரித்தார். இதற்கிடையே மற்ற காவலர்களையும் அலைபேசி மூலம் தகவல் அளித்து, சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். 

 

விசாரணயில் அந்த ஆண், தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த மாதையா என்பதும், உடன் வந்த பெண் மாரண்ட அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவாக வேலை செய்துவருவதும் தெரியவந்தது. இவர்களிடம், பென்னாகரம் அருகே உள்ள எர்ரகம் பகுதியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர்தான் போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பியவர் என்பதும் தெரியவந்தது.

 

இதையடுத்து, ஏர்ரகத்தில் உள்ள முருகன் வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்தனர். அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். வீட்டில் கலர் ஜெராக்ஸ் மெஷின் வைத்து, ரூபாய் நோட்டுகளைக் கலர் பிரிண்ட் எடுத்து, தெரிந்தவர்கள் மூலம் புழக்கத்திற்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டை கலர் பிரிண்ட் எடுத்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அதிகளவில் கலர் பிரிண்ட் போட்டுள்ளார். 

 

அவருடைய வீட்டில் இருந்து போலி 500 ரூபாய் நோட்டுகள் 20, 200 ரூபாய் நோட்டுகள் 57, 100 ரூபாய் நோட்டுகள் 270 என மொத்தம் 48,400 மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள், கலர் பிரிணடர், ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாக முருகன், மாதையா, ஜோதி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காய்கறி கடையில் கள்ள நோட்டை மாற்ற முயற்சி; விசாரணையில் சிக்கிய 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Attempt to exchange counterfeit note in greengrocer's shop; 45 lakh rupees fake notes caught in investigation

 

கள்ள நோட்டுகளை அச்சிட்டு சென்னையில் புழக்கத்தில் விட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காய்கறி கடையில் தங்களிடம் சிலர் கள்ள நோட்டுகளை கொடுத்து விட்டு காய்கறிகளை வாங்கிச் சென்றதாக கடைக்காரர் தினேஷ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் காய்கறி கடையில் முதியவர் ஒருவர் மூன்று கள்ள ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றது தெரிய வர போலீசாருக்கு தினேஷ் தகவல் கொடுத்தார்.

 

போலீசார் உடனடியாக அந்த முதியவரை விசாரித்ததில் அவர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டிலிருந்து கட்டு கட்டாக சுமார் 45 லட்சம் மதிப்புடைய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். 'கோடீஸ்வரன்' என்ற பெயரில் விளம்பரப்படம் எடுப்பதற்காக அந்த நோட்டுகளை அச்சடித்ததாகத் தெரியவர, போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக் கொடுத்த குமார் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.                  

 

 

Next Story

சென்னையில் கள்ள நோட்டுகளை அச்சடித்த வாலிபர்; போலீசார் அதிரடி!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

chennai kodungaiyur fake currency notes related incident

 

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள சேலைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 36). குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் அம்ரோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற வழக்கில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் சூர்யா பதுங்கி இருப்பதாக குஜராத் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவரை தேடி சென்னை வந்தனர்.

 

இந்நிலையில் சென்னை வந்த குஜராத் மாநில போலீசார் கொடுங்கையூர் போலீஸ் உதவியுடன் நேற்று சூர்யாவை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்தும் இயந்திரம் மற்றும் கள்ள நோட்டுகளை மணலியில் உள்ள  கோவிந்தசாமி தெருவில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து குஜராத் மாநில போலீசாரும் கொடுங்கையூர் போலீசாரும் இணைந்து மணலியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருந்து 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தி வந்த  2 அச்சு இயந்திரங்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.