Skip to main content

கார் ஷெட்டில் 20 பேட்டரிகள் திருட்டு! - வாட்ச்மேன்கள் இருந்தும் அரங்கேறிய சம்பவம் 

Published on 13/02/2024 | Edited on 13/02/2024

 

20 batteries stolen from car shed near Jolarpet

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் லோகநாதன் (40), செந்தில்குமார் (37) ஆகிய இருவரும் நாட்றம்பள்ளி அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பூபதி கவுண்டர் தெரு பகுதியில் அருகருகில் கார் பழுது நீக்கும் கார் ஷெட் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களது கார் ஷெட்டில் இரவு நேரத்தில் வாட்ச்மேன்கள் இருந்தும் அவ்வப்போது 18 பேட்டரிகள் காணாமல் போய் உள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷெட் உரிமையாளர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் சி.சி.டி.வி பொருத்தி உள்ளனர். இந்த நிலையிலும் லோகநாதனின் கார் ஷெட்டில் இரண்டு பேட்டரிகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கார் ஷெட்டின் உரிமையாளர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் கார் செட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அங்கும் இங்கும் மறைந்து திரிந்து பூனை போல பேட்டரிகளை மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சி பதிவானதை வைத்து மர்ம நபரை வலை வீசித் தேடி வருகின்றனர். இதுவரை சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பேட்டரிகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்