
ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 18,158 பேரிடம் இருந்து 1.41 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் உத்தரவின் பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய சோதனையில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தவர்கள், பொதுப்பெட்டிக்கான பயணச்சீட்டை வைத்துக் கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் எடுத்துச் சென்றவர்கள் உள்பட ரயில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 18,158 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 1.41 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ''பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் பயணிகளிடம் இருந்து இரு மடங்கு அபராதம் வசூலிக்கப்படுவதுடன், ஓராண்டுச் சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.