Skip to main content

அரிசி மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்ட 15 லட்சம்; தெரியாமல் வாங்கிச் சென்றவரை தேடிய வியாபாரி

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
nn

திருடர்களுக்கு பயந்து 15 லட்சத்தை அரிசி மூட்டையில் பதுக்கி வைத்த அரிசி வியாபாரிக்கு நேர்ந்த துயரம் வடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம். இவர் திருட்டுக்கு பயந்து சிறுக சிறுக சேர்த்து வைத்த 15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில் பதுக்கி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னுடைய உறவினரான சீனிவாசன் என்பவரிடம் அரிசிக் கடையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார் சண்முகம்.

திரும்பி வந்து பார்த்தபோது 15 லட்சம் ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த அரிசி முட்டை காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகன், உறவினரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். உறவினர் சீனிவாசனோ விற்பனைக்கு வைத்திருந்த அந்த அரிசி மூட்டைதானே என ஒருவருக்கு விற்று விட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக கடையிலிருந்த சிசிடிவி காட்சியை எடுத்து பார்த்த பொழுது மந்தாரக்குப்பம், மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற முதியவர் அந்த அரிசி மூட்டையை வாங்கி சென்றது தெரிந்தது.

சண்முகனும் சீனிவாசனும் பூபாலன் வீட்டை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து சென்றுள்ளனர். அங்கு சென்றபோது அரிசி மூட்டை பிரிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பூபாலன் வீட்டில் இல்லாத நிலையில் உடனடியாக பூபாலனின் மகளிடம் சண்முகம் நடந்ததை எல்லாம் விளக்கமாக கூறியுள்ளார். அவசர அவசரமாக மூட்டைக்குள் கையை விட்டு தேடிய பொழுது உள்ளே பண கட்டுகள் இருந்தது.

இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டு சண்முகம், கிடைத்த நோட்டு கட்டுகளை எண்ணிப் பார்த்த பொழுது 10 லட்சம் மட்டுமே இருந்தது. 5 லட்சம் ரூபாயை காணவில்லை. மீதம் 5 லட்சம் எங்கே என சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்முகத்தின் சந்தேகம் மீண்டும் உறவினர் பக்கம் திரும்ப, வடலூர் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்துள்ளார்.

15 லட்சத்தில் ஐந்து லட்சம் ரூபாயை என் உறவினரே எடுத்துவிட்டு அரிசி மூட்டையை ஒருவரிடம் விற்றுள்ளார் என புகாரில் தெரிவித்துள்ளார். காவல்துறை இருதரப்பையும் கூப்பிட்டு விசாரித்த போது சண்முகத்தின் உறவினர் 'ஐந்து லட்ச ரூபாயை நான் கொள்ளை அடிக்க  நினைத்திருந்தால் அந்த 10 லட்சத்தையும் சேர்த்துக் கொள்ளையடிக்க எனக்குத் தெரியாதா?' என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இப்படியாக வடலூரில் நிகழ்ந்துள்ள அரிசிக்கடை சம்பவம் முற்றுப்பெறாமல் விசாரணையில் இருந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்