Skip to main content

144 தடை உத்தரவு?? ஜெ.பாணியில் எடப்பாடி ரகசியத் திட்டம்

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பகீரத முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியைவிட 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றியைத்தான் மிக முக்கியமாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

         

 

நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது (ஏப்ரல்-18). காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18-ல் தேர்தலை நடத்த முன்வந்த தேர்தல் ஆணையம், நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 4 தொகுதிகளுக்கும் மே 19-ல் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை மே 23-ல் நடக்கிறது. 

          

election

 

’’தமிழக சட்டமன்றத்தில் தற்போதைய நிலவரத்தின்படி பெரும்பான்மை பலமில்லாத அரசாக இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. அதனால், மே 23-ல் எடப்பாடிக்கு க்ளைமாக்ஸ் உருவாகியிருக்கிறது. ஆட்சிக் நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது மே 23-க்குப் பிறகு தெரியவரும். அந்த வகையில், தனது ஆட்சியை நிலைநிறுத்தும் நெருக்கடியில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலை விட , இடைத்தேர்தல் வெற்றியில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி. இதற்காக, ஜெயலலிதா பாணியில்  ரகசிய திட்டத்தை கையிலெடுத்துள்ளார் அவர் ’’ என்கிறார்கள் அதிமுகவிற்கு நெருக்கமான அதிகாரிகள்.  

               

அது என்ன ஜெ.பாணி அரசியல்? 

               

 

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார். மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மோடி பிரதமர் ஆவார் எனவும் தேசம் முழுவதும் ஒரு அலை வீசிய நேரத்தில், ’தமிழகத்தில் மோடி அலை கிடையாது. மோடியா? இந்த லேடியா? பார்த்துவிடுவோம்‘ என சவால் விடுத்தார் ஜெயலலிதா. 

                

election

 

அதற்கேற்ப, வெற்றிப் பெறுவதற்கான வழிகளை தனது செக்ரட்டரிகளிடமும் உளவுத்துறை அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாக விவாதித்துப்படி இருந்தார். உளவுத்துறை அதிகாரிகள்,  ’ ஓட்டுக்கு பணம் வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஆண்-பெண் வித்தியாசமில்லாமல் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தப்படி இருக்கிறது. வாக்குகளை பர்ச்சேஸ் பண்ணுவதன் மூலம் இலக்கை அடைய முடியும் ’ என யோசனை தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அந்த பணத்தை எப்போது தரலாம்? என நடத்திய ஆலோசனையில், வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் மக்களிடம் சேர்க்கப்படும்பட்சத்தில் அதனை நினைவில் வைத்திருப்பார்கள் என விவரித்தனர். அதன்படி, காரியத்தை நடத்தி முடித்தார் ஜெயலலிதா. 

           

 

எப்படி சாதித்தார் ? என அன்றைக்குத் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, ‘’ வாக்குப்பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்படும். அதன்பிறகு, வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிக்கலாமே தவிர பிரச்சாரம் செய்ய முடியாது. அதனால், அதிமுகவுக்கு இணையாக திமுகவினர் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வலம் வருவர். ஆளும்கட்சியினர் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்களா? என கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பார்கள். அதனை மீறி முழுமையாக பணம் கொடுப்பது சாத்தியமில்லை. அப்படியே கொடுத்தாலும் கலவரங்கள்தான் வரும். 

            

election

 

அதனால், கும்பல் கும்பலாக திமுகவினர் சுற்றி வருவதைத் தடுக்க வேண்டுமாயின் 144 தடை உத்தரவு அமலில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். திமுகவினர் கும்பலாக சுற்றுவதை தடுத்தாலே மக்களை நாம் எளிதாக அணுகிவிட முடியும். ஆக, 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி எடுங்கள் என ஜெயலலிதாவிற்கு ஐடியா தந்தனர்  அதிகாரிகள்.

             

 

இது குறித்து, அன்றைக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன்குமார் ஐ.ஏ.எஸ்.சிடம் ஜெயலலிதாவின் செக்ரட்டரிகள் ரகசியமாக ஆலோசித்தனர். அப்போது, டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்தால், 144-ஐ அமல்படுத்த எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என சொல்லியிருக்கிறார் பிரவீன்குமார். இந்த விபரம் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது சோர்ஸ்கள் மூலம் காய்களை நகர்த்தினார் ஜெயலலிதா. அதற்கேற்ப பிரவீன்குமாருக்கு டெல்லியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

              

 

இதனையடுத்து, ‘ ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தமிழகம் முழுவதுமிருந்து நிறையப் புகார்கள் வருகின்றன. அதனால், அரசியல்கட்சிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க, பிரச்சாரம் முடிந்த நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது ‘ என அறிவித்தார் பிரவீன்குமார். 

               

 

அதற்கேற்ப திமுகவினரை கண்காணித்தபடி தேர்தல் பார்வையாளர்கள் ஜெயலலிதா போலீஸ் துணையுடன் வலம் வந்தனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாமல் திமுகவினர் திணறினர். அதேசமயம், மற்றொருபுறம் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு இரண்டு நபர்களாகப் பிரிந்து வாக்காளர்களுக்குப்  பணத்தை விநியோகித்து முடித்தது அதிமுக. இதுதான் 37 தொகுதிகளில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுத்தது ‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள். 

               

 

ஜெயலலிதாவின் இந்த பாணியை கையிலெடுத்திருக்கும் எடப்பாடி, மூத்த அமைச்சர்களுடன் ரகசியமாக இது குறித்து விவாதித்திருப்பதுடன் 144 தடை உத்தரவை அமல் படுத்துவதற்காக டெல்லியின் உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.