
தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யாக உள்ள தேன்மொழி, தமிழக போலீஸ் அகாடமிக்கு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வில் திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பதவி உயர்வில் கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா பதவி உயர்வில் திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி பதவி உயர்வில் மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வி. அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராகவும், எஸ். வனிதா மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி. ரமேஷ்பாபு நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், எஸ்.எஸ். மகேஸ்வரன் சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராகவும், மதுரை நகர் துணை ஆணையர் பாலாஜி காவலர் நலத்துறையின் ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்.பி. ஆதி வீரபாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.