Skip to main content

அரசுப் பள்ளிகளில் படித்த 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு..!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
medical-academic


தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12 மாணவர்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மருத்துவ கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவ, மாணவிகள் இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் 1-1000 வரையிலான முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும், 1001-3000 வரை 8 பேரும், 3001-5000 வரை 16 பேரும், 5001-10000 வரை 76 பேரும், 10001-15000 வரை 157 பேரும், 15,001-25000 வரை 1,059 பேரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இதில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு வசதியாக அரசு சார்பில் நீட் தேர்வுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி மையங்கள் அமைத்து, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 1,337 பேர் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவரை விட சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு ஒதுக்கீடு பிரிவின்கீழ் 5,449 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர். தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்கான மாணவர்களின் பட்டியலில் இடம்பெற்ற சிபிஎஸ்இ உள்பட பிற பாடத்திட்டங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்