Skip to main content

சசிகலாவை சந்திக்கும் பிரேமலதா விஜயகாந்த்..?

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

Will premalatha vijayakanth meet sasikala

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று (24.02.2021) தமிழகம் முழுக்க அக்கட்சியினர் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையின் சார்பாக இன்று காலை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவச்சிலைக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், சசிகலா தான் தங்கியிருக்கும் சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். அதன்பின் ஒருசில வார்த்தைகளையும் பேசினார்.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த பிப். 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பிப். 9ஆம் தேதி காலை சென்னை வந்தார். அவர் வந்ததும் தமிழக அரசியல் களம் அதீத சூடு பிடிக்கும் என்றும், அதிமுகவில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்ற பேச்சுகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், சென்னை வந்த சசிகலா பொதுவெளியில் தோன்றாமல் மௌனம் காத்துவந்தார். 15 நாட்கள் கழித்து இன்று ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடினார்.

 

Will premalatha vijayakanth meet sasikala

 

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் சசிகலாவை நேரில் சந்தித்தனர். சில நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பிற்குப் பின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்துப் பேசினார். மேலும் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். சசிகலாவை சந்தித்த இவர்கள், ‘இது சம்பிரதாயமான சந்திப்பு, நலம் விசாரித்தோம்’ எனத் தெரிவித்தனர். ஆனால், இது வெறும் நலம் விசாரிப்புடன் முடிந்திருக்காது. நிச்சயம் அரசியல் தொடர்பான பேச்சுகளும் இதில் இடம்பெற்றிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Will premalatha vijayakanth meet sasikala
                                                   கோப்புப் படம்

 

அரசியல் களத்தில் ஏற்கனவே, சசிகலா தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி அமையும் என கருத்துகள் எழுந்துவரும் நிலையில், இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி, இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமென அதிமுகவும், தேமுதிகவும் சொல்லிவந்தன. ஆனால் பல இடங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், வெளிப்படையாக, “இன்னும் அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. விரைவில் எங்களைக் கூப்பிட்டு தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வேண்டும்,” என்று தெரிவித்துவந்தார். அதேவேளையில், சசிகலா விடுதலையாகி சென்னை வந்த பிறகு, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்திடம் கேட்கப்பட்ட சசிகலா குறித்தான கேள்விக்கு, “ஒரு பெண்ணாக அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது எனது விருப்பம்” எனத் தெரிவித்தார்.

 

அதிமுக தரப்பில் இருந்து இன்னும் வெளிப்படையாக தேமுதிகவிடம் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. மறைமுகமாகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் இருதரப்பிலிருந்து தகவல்கள் வெளிவராத நிலையில், சரத்குமார், சீமான் வரிசையில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.