Skip to main content

‘அடிக்கிற மாதிரி அடிக்கிறோம்; அழற மாதிரி அழுங்க!’ - தி.மு.க.-அ.தி.மு.க. ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ வேட்பாளர்கள்!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

 

‘நாங்க அடிக்கிற மாதிரி அடிக்கிறோம்; நீங்க அழற மாதிரி அழுங்க!’ என்று பேசி வைத்துக்கொண்டு அறிவித்தது போல் இருக்கிறது, சில முக்கியத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்!

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “வேட்பாளர் பட்டியலே முதல் கதாநாயகன்” எனச் சொல்கிறார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சம்பத்குமார், அப்படி ஒன்றும் ‘டஃப்’ கொடுக்கக்கூடிய வேட்பாளர் இல்லை என்கிறார்கள், அத்தொகுதியின் தட்பவெப்பம் அறிந்த உ.பி.க்கள். 

 

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

 

முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் நிற்கும் கொளத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்து நிற்க, கொளத்தூர் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத, தென் சென்னை பகுதியைச் சேர்ந்த ஆதிராஜாராமை களமிறக்கியிருக்கிறது ஆளும்கட்சி. அவரோ ‘கேட்டது ஆயிரம் விளக்கு; கிடைத்ததோ கொளத்தூர்’ என்று புலம்புகிறாராம். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டியாக கோதாவில் தள்ளி விடப்பட்டுள்ளார், பா.ம.க. வேட்பாளரான கஸ்ஸாலி. 

 

தி.மு.க.வில்  துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஐ.பெரியசாமியை, ஆத்தூர் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட தேர்வாகியுள்ள பா.ம.க. வேட்பாளர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நான்கு மாவட்டங்கள் தள்ளியிருக்கும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர். ஆரியநல்லூரில் நடந்த பா.ம.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் யாருமே பங்கேற்கவில்லை.

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

 

மதுரை மத்திய தொகுதியின் தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்துப் போட்டியிடுவது, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பசும்பொன் தேசிய கழகத்தின் நிறுவனரான ஜோதி முத்துராமலிங்கம். ‘தேவர் வழித் தோன்றல்’ என்பதாலோ என்னவோ, விருதுநகர் மாவட்டம், புலிச்சகுளத்தைச் சேர்ந்த இவரை, மதுரை மத்திய தொகுதியில் நிறுத்தியிருக்கின்றனர். 

 

திருச்சுழி தொகுதியின் தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்குப் போட்டியாக, அ.தி.மு.க. கூட்டணி, களத்தில் இறக்கியிருப்பது, மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச்செயலாளரான எஸ்.ஆர். தேவரை. ‘மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை இந்தத் தேர்தலில் தோற்கடிப்போம்!’ என்று தொடர்ந்து சூளுரைத்துவிட்டு, ராஜபாளையம் தொகுதியின் சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனையே, அக்கட்சி மோதவிட்டுள்ளது. தூத்துக்குடி சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவனை எதிர்த்துப் போட்டியிடுவது, த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன். 

 

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

 

வேட்பாளர் தேர்வில் இரு கழகங்களும் காட்டிய அக்கறையை(?), ஒவ்வொரு தொகுதியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது, தேர்தல் களத்தில் புலியைப் பின்னுக்குத் தள்ளிய பூனைகள் உண்டென்றாலும், முன்பு வாய்ச் சொல்லில் காட்டிய வீரம், வேட்பாளர் அறிவிப்பில் காணாமல் போனது அப்பட்டமாகவே தெரிகிறது. 

 

இதைத்தான்  ‘இரு பெரிய கட்சிகளுக்கிடையிலான அட்ஜஸ்ட்மென்ட்’ என்று அந்தந்த கட்சியினரே ‘கமெண்ட்’ அடிக்கின்றனர். 
 

 


சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.