Skip to main content

“இதற்கெல்லாம் சசிகலா, தினகரன் கும்பல்தான் காரணம்” - சி.வி. சண்முகம் ஆவேசம்!!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

"Sasikala, Dinakaran gang is the reason for all this" -CV Shanmugam is furious !!

 

முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம், கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு அரசியல் குறித்து எந்தவித அறிக்கையும் பேட்டியும் பத்திரிகை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாமல் மௌனம் சாதித்துவந்தார். அப்படி இருந்தவர் சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் இறந்த துக்கத்தை விசாரிப்பதற்காக அங்கு சென்றுவந்தார். மற்றபடி மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களைக் கூட பெருமளவில் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். இருந்தபோதிலும் அவரது ஆதரவாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தேர்தல் தோல்வி குறித்தும் கட்சி பணிகள் குறித்து கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது விவாதித்துவந்தனர். 

 

மேலும், சசிகலா சமீபத்தில் அதிமுக கட்சித் தொண்டர்களிடம் ஃபோன் மூலம் பேசி ஆறுதல் சொல்லியதும், கட்சியைக் காப்பாற்ற நான் வருவேன், கட்சி வீணாவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன் என்று கூறியது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா மீண்டும் அரசியலுக்குள் நுழைவதற்கு வழி தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த முன்னாள் முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிக்கை ஊடகத்தினரைச் சந்தித்துப் பேசினார். அதில், “சசிகலாவுக்கு அதிமுக குறித்து பேசுவதற்கு  உரிமை இல்லை. அவர் ஃபோனில் பேசி ஆறுதல் கூறியது தினகரன் கட்சியில் உள்ள அமமுக தொண்டர்களுக்குத்தான்” என்று கூறினார். இதையடுத்து நேற்று (07.06.2021) விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்களை வரவழைத்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

 

"Sasikala, Dinakaran gang is the reason for all this" -CV Shanmugam is furious !!

 

முடிவில் பத்திரிகை, ஊடகத்தினரிடம் பேசும்போது, சசிகலா செல்ஃபோன் மூலம் கட்சி தொண்டர்களிடம் ஆறுதல் வார்த்தை பேசிவருவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “அதிமுக, தொண்டர்களால் உருவான இயக்கம். எம்.ஜி.ஆர் கூட அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு பல்வேறு நபர்கள் பல்வேறு விதங்களில் கட்சியை சுக்குநூறாக உடைப்பதற்கு பலமுறை பல்வேறு விதமான முயற்சிகளை செய்தனர். அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன. தொண்டர்கள் பலத்தில் இயங்கும் இயக்கம் இது. இந்த இயக்கத்திலிருந்து நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று சொல்லிக்கொண்டு நெடுஞ்செழியன், பண்ருட்டியார், கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சித்துப் பார்த்தார்கள். அவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களாவது அதிமுக வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். நெடுஞ்செழியனைவிட பெரிய ஆளா சசிகலா? அப்படிப்பட்டவர்களால் கூட இந்த கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட இந்த இயக்கத்திற்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தமும் இல்லை. 

 

ஜெயலலிதாவிற்கு (அம்மா) உதவியாளராக அவர் வீட்டுக்கு வந்தவர் சசிகலா. மற்றபடி அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் தினகரனும் தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்  தலைமையிலான அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது, இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று  வழக்குத் தொடுத்தார்கள். அதை விசாரணை செய்த தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் இயங்கும் அதிமுகதான் உண்மையான இயக்கம். அந்த இயக்கத்திற்குதான் இரட்டை இலை சொந்தம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். அதே தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றமும் அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அங்கேயும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படிப்பட்ட சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் காளிமுத்து அடிக்கடி கூறுவார், கருவாடு மீனாகாது என்று கூறுவார்கள். கருவாடு கூட மீனாகும், ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுகவில் உறுப்பினராக கூட ஆக முடியாது. 

 

அதனால் தொண்டர்கள் ஆதரவோடு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் கட்சி செயல்படும்” என்று ஆவேசமாக கூறினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், இவரது இந்த ஆவேசமான பேச்சை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் பலத்த கைதட்டல் செய்து வரவேற்றனர். இவரது பேச்சு அதிமுக தொண்டர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சசிகலா தினகரன் தரப்பினரிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். “தினகரன் கட்சியை நம்பி சென்ற பிரமுகர்கள் பலரும் கடனில் தத்தளிக்கின்றனர். அதிமுகவில் போட்டியிட்ட பல வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் இழப்பதற்கு காரணமாக இருந்தது சசிகலா தினகரன் தான். தன் கண் குருடானாலும் பரவாயில்லை, எதிரியின் கண் குருடாக வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் சசிகலா தரப்பினர். அதனால் தேர்தலுக்கு முன்பு கூட சசிகலாவின் பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு ஒருவித அனுதாபம் இருந்தது. தேர்தலில் தோற்பதற்கும் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாமல் போனதற்கும் தினகரன், சசிகலா ஆகியோர்தான் மிக முக்கியக் காரணம் என்ற கோபம் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள்வரை ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகதான் சி.வி. சண்முகம் தொண்டர்களின் கருத்தைப் பிரதிபலித்துள்ளார்” என்கிறார்கள் அதிமுகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.