Skip to main content

“மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் அதிக வருமானம் வரும் என பார்த்து செய்துள்ளனர்”-அமைச்சர்களின் தந்திரங்களை விளக்கிய பி.டி.ஆர்!   

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

PTR explaining the ministers' tactics

 

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டங்களை ஆய்வு செய்த தமிழக நிதி மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அங்கு நடந்த குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். அதே போல் இதனை மத்திய, மாநில தணிக்கை குழு  மூலம் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் பெரியார் பேருந்து நிலையம் மக்கள் நிதியில் கட்டியது மாபெரும் தவறு என்றார்.  அதன் பின்னர் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்த கட்டுமான பணிகள் மற்றும் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வணிக வளாக பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மூன்று அமைச்சர்களின் ஊழலும் வருமானம் மட்டுமே முக்கியமாகப் பார்க்கப்பட்டுள்ளது.

 

அதற்கு சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருந்த பேவர் பிளாக் சாலை மற்றும் ஆற்று மணல்கள் திருடப்பட்டு கருங்கல் போடுவதாக முறைகேடு செய்துள்ளனர். நன்றாக இருந்த சாலையைக் கெடுத்து ஊழலுக்காக, வருமானத்திற்காக அமைச்சர்கள் இது போன்ற திட்டங்களை செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாக உள்ள திட்டங்களை எவ்வாறு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்தத்திற்காக கட்டப்பட்டுள்ள வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு குளியலறை, கழிப்பறை உள்ளிட்டவை போதுமான வகையில் அமைப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அந்த பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கூர்ந்து கண்காணிப்படவேண்டும்.

 

PTR explaining the ministers' tactics

 

இதுபோன்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய, மாநில தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணித்து எவ்வாறான முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒரு திறப்பு விழாவிற்கு சென்ற போது அந்த திட்டத்தில் கட்டப்பட்ட தரைதளம் உடைந்து விழுந்தது மக்களுக்கு ஞாபகம் இருக்கும். அதுபோன்ற ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தான் நாங்கள் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். முதல்வர் தலைமையிலான அரசு மக்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது கடமையாக கொண்டு செயல்படுகின்றோம். வருமானம் வரக்கூடிய திட்டங்களில் கொஞ்சம் அரசு நிதியும், கொஞ்சம் கொஞ்சம் கடனும் பெற்று செய்தால் அதில் வரும் வருமானத்தை கொண்டு கடனை அடைக்க உதவியாக இருக்கும்.  சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் திட்டங்கள் முழுமையாக அரசு நிதியில் இருந்து செய்ய வேண்டும். குடிநீர் இணைப்புக்கு பெறப்படும் நிதி அதிகமாக பெறப்படுகின்றது.

 

ஆனால் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வரி வசூல் செய்யப்படுவதில்லை. பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான வசூல் சற்று தான் வித்தியாசம் உள்ளது. அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் நிதியில் கட்டியது; இதுமுற்றிலும் தேவையற்றது. பள்ளிகள் சுகாதாரத்தை மேம்படுத்தும் கழிப்பறை, குளியலறை கட்டுவதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்தலாம். வருவாய் தரக்கூடிய திட்டங்களில் மக்களின் பணத்தை முழுவதும் செலவு செய்யக் கூடாது. வருமானம் வரக்கூடிய திட்டங்களில் அரசு நிதி கொஞ்சமும் மீதமுள்ள நிதி கடன் பெற்று திட்டத்தை நிறைவேற்றினால் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வரும் வருவாயைக் கொண்டு அந்த கடனை அடைக்க உதவியாக இருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில் இவற்றை கருத்தில் கொண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழகம் மூலம் 70 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு திட்டமும் செய்யாமல் நிதி மக்களுக்கு பயன் இல்லாமல் தண்ணீராக கரைந்து சென்றுள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தலை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுபோன்ற திட்டங்களை எவ்வாறு  செயல்படுத்தலாம் என்று கருத்துக்கள் கேட்டுதான் இனி புதிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம். திட்டங்கள் அதிகம் கொண்டுவர, கொண்டுவர வளர்ச்சி அதிகரிக்கும் வளர்ச்சியின் மூலம் பொருளாதாரம் மேம்படும். தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல் கட்சி வேறுபாடின்றி யார் மீது எங்கெங்கு குற்றச்சாட்டு உள்ளதோ காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உரிய ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த அரசியல்வாதிகளை மட்டும் பேசாமல் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் அடிப்படை தவறாக உள்ளது.

 

அந்த அறிவாளிகள் மேற்கொண்ட திட்டம் தங்களுக்கே தெரியும் பேவர் பிளாக் சாலையில் அகற்றி அங்கிருந்த ஆற்று மணலை திருடிய பின்னர் கருங்கற்களை பதித்தனர். அதில் அதிக சூடு ஏற்படுவதாகக் கூறி அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களைத் தான் அந்த அறிவாளிகள் செய்து உள்ளார்கள். பெரியார் பேருந்து நிலையத்தில் கடைசி நேரத்தில் திட்டத்தில் கூடுதல் நிதியை முறைகேடு செய்வதற்காக தரைதளத்தில் கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு நிதிகள் அதிகம் ஒதுக்கி உள்ளனர். பழி வாங்குவது இருக்கட்டும்; மக்களின் நிதியை முறையாக எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து எங்களுடைய பணிகள் இருக்கும். காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனை பாடமாகக் கொள்ளவேண்டும் அப்படி செய்தால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது. இது போன்ற நடவடிக்கைகள் தான் முக்கியம் தனி நபர்களை தாக்குதல் செய்வது முக்கியமல்ல” என்றும் தெரிவித்தார். பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.