Skip to main content

டிசம்பர் 4ஆம் தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
dmk



கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது. காங்கிரஸ், மதிமுக, விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 
 

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தக் கூட்டத்தினுடைய தொடக்கத்தில் அண்மையில் கஜா புயலினால் உயிரிழந்து இருக்கக்கூடிய தோழர்களுக்கு, விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று எங்களுடைய அஞ்சலியை நாங்கள் செலுத்தி இருக்கிறோம். 
 

அதைத் தொடர்ந்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உடனடியாக தமிழக சட்டமன்றத்தினுடைய சிறப்புக் கூட்டத்தை, மாநில அரசு கூட்டி ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வருகின்ற டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருச்சி மாநகரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம்.

 

நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில் தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் டெல்டா பகுதியில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். எனவேதான் திருச்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அந்த திருச்சியும் டெல்டாவுக்குள் வருகிறது. எனவே, அந்த திருச்சியிலே ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம் . எனவே அங்கே நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பேதங்களை மறந்து, கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும். அந்த டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களும் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எல்லாக் கட்சித் தலைவர்களும் அதிலே பங்கேற்க இருக்கிறார்கள். அரசியலை மறந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கலாம் என்றார். 

 

முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய்மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறது.
 

5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத்  திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் - அந்த இறுதித்  தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத்  தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது. காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின்  கருத்தினைக்  கேட்காமல்  புதிய  அணை  கட்டுவது,  இரு மாநிலங்களின் நெடுங்கால நல்லுறவிற்கும் கூட்டாட்சிக் கொள்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக் காட்ட விரும்புகிறது.

 

dmk


 

“தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறையும் விதத்தில், கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டக் கூடாது என்றும், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைகளை பாதிக்கும் விதத்தில் கர்நாடகம் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது” என்றும் நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு முற்றிலும் விரோதமாக கர்நாடக அரசு செயல்படுவது சட்டத்தின் ஆட்சியை அறவே மதிக்காத போக்கு என்றும், தமிழக மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பல்வேறு மெகா கூட்டு குடிநீர்த்  திட்டங்களைச்  செயலிழக்க வைக்கும் உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான கெடு முயற்சி என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது.
 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக்  கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொதுநலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
 

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் - ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு,  தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு “நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக்கூடாது.  காவிரி விவகாரத்தில் அனைத்து  முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது” என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக,  கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.
 

மத்திய அரசின் இந்த அனுமதி,  காவிரி டெல்டா பகுதியை   பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரைமட்டமாக்கிப் புதைத்துவிடும்  படுபயங்கர  வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

 

dmk


 

“கடிதம்” எழுதி விட்டாலே “கடமை” முடிந்து விட்டது என்று அ.தி.மு.க. அரசு,  அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மத்திய அரசு  விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது. மாநில உரிமைகளை - மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துக் கொண்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தீராத தொல்லையாகவும், தீர்க்க முடியாத வாழ்வாதாரப் பிரச்சினையாகவும் மாறும் பேரிடர் உருவாகி வருகிறது. அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதலமைச்சரும் “மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்து, தங்கள் சுயநலத்தைத் தவிர,  மாநிலத்தின் பொதுநலன் பற்றிக்  கவலையில்லை என்ற போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு தமிழகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்த கவலை கொள்கிறது.
 

எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் “விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை” தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும்  வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
 

அதிமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி  இந்த அனுமதியை ரத்து செய்ய  தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

dmk


அதுமட்டுமல்லாமல், நடைபெறவிருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
 

மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.