‘அவுக கேட்கிறாக; இவுக கேட்கிறாக; அதுவும் விவஸ்தையில்லாம கேட்கிறாக. தலையைப் பிச்சிக்கலாம் போல இருக்கு’
-பொதுத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பெரிய கட்சிகளின் பொதுவான புலம்பல் இது!
![virudhunagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/H1RZ_wRkOR6Sg37JdtKThdPwQ3VyWa5s0DTIt19ndCM/1550837578/sites/default/files/inline-images/virudhunagar.jpg)
இந்தத் தடவை, பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7 என கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுக, தொகுதிகளின் எண்ணிக்கையை ஒதுக்கீடு செய்துவிட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதில் பா.ம.க. காட்டுகின்ற ஆர்வம்தான் அதிமுக வட்டாரத்தில் இப்போது பெரிதாகப் பேசப்படுகிறது. சாம்பிளுக்கு விருதுநகர் தொகுதியை எடுத்துக்கொள்வோம்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சிவகாசி தொகுதியில் பா.ம.க. வேட்பாளராகப் போட்டியிட்டவர் திலகபாமா. பதிவான 1,75,702 வாக்குகளில் 0.77 சதவீத வாக்குகளே அவர் பெற்றார். அதாவது, பா.ம.க.வேட்பாளரான அவருக்கு வாக்களித்தவர்கள் 1,350 பேர்தான். சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் மாவட்ட தொகுதி ஒன்றில், ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெற முடியாத பா.ம.க., வரவிருக்கும் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, இதே திலகபாமாவுக்காக விருதுநகர் தொகுதியைக் கேட்கிறதாம்.
தேனி பாராளுமன்ற தொகுதியைக் கேட்டாலும், அது தனக்குச் சரிவராது என்ற சந்தேகத்தால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் இன்னொரு சாய்ஸாக இருக்கிறது விருதுநகர். முக்குலத்தோர் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் தொகுதியை அவருக்காக கேட்டுவரும் நிலையில், வாக்காளர்கள் எண்ணிக்கையில் சமுதாய ரீதியாக 4-வது இடத்தில் உள்ள நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த திலகபாமாவுக்காக பா.ம.க. கேட்பது வியப்பாக இருக்கிறது என்று முணுமுணுக்கிறார்கள் ஆளும் கட்சியினர். விருதுநகர் தொகுதிக்காக பா.ம.க. தரும் அழுத்தம் ரவீந்திரநாத் குமாருக்கும் ‘ஷாக்’ அளித்திருக்கிறது.
அதிமுக வாக்கு வங்கி பலமாக உள்ள விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை, அத்தொகுதியில் வாக்கு வங்கியே இல்லாத பா.ம.க.வுக்காக கேட்கும் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் சாமர்த்தியத்தை எண்ணி சிலாகிக்கின்றனர் பா.ம.க.வினர்.