Skip to main content

“பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு விஷயம் மட்டும் உயர்ந்திருக்கிறது” - அருண் நேரு விமர்சனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Perambalur Constituency candidate Arun Nehru Campaign Criticizing BJP

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரம்பலூர்  பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு அரசலூர், அன்னமங்கலம், தொண்டமான் துறை, தழுதாழை, அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், வெங்கலம் கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், நூத்தாப்பூர், கைகளத்தூர், பில்லங்குளம்,ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது பேசிய  வேட்பாளர் அருண் நேரு, “வேப்பந்தட்டை பகுதியில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே உள்ளது. அதற்கு வேளாண் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.  மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இரண்டு விஷயம் மட்டும் உயர்ந்திருக்கிறது. ஒன்று கேஸ் விலை, மற்றொன்று பெட்ரோல், டீசல் விலை. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் ஒரு சதவீதம் கூட உயரவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் திட்டங்களை முன்னிறுத்தி, செயல்பட பாடுபடுவோம்.

தமிழகத்தில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்  அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கனடா போன்ற மேலை நாடுகளில் இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆகவே பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திராவிட மாநில அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பிரதமர் நாட்டில் ஒரே கோவிலைக் கட்டி விட்டு நான் தான் கோவில் கட்டி விட்டேன் என்று மார்தட்டி கொள்கிறார். ஆனால், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகால நம்முடைய திமுக ஆட்சியில் 1400 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து தமிழக முதலமைச்சர் பெருமை சேர்த்துள்ளார்.

எனவே மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்,  வளர்ச்சித் திட்டங்களை நம்மால் நிறைவேற்றி மக்களுக்காக குரல் கொடுக்க முடியும். பெரம்பலூர் தொகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” என்றார்.

பிரச்சாரத்தின் போது பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர்  ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.சி.பாஸ்கர், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், பூலாம்பாடி பேரூராட்சி நகரச் செயலாளர் செல்வ லட்சுமி சேகர், மாவட்ட பிரதிநிதி அழகுவேல் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

சார்ந்த செய்திகள்