Skip to main content

புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை 144 தடை! வெளிமாநில வாகனங்களுக்கு தடை - நாராயணசாமி அறிவிப்பு! 

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

 

கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாரத பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவையொட்டி புதுச்சேரியில் முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. புதுச்சேரியின் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
 

இந்நிலையில் கரோனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாலை 5 மணி அளவில் கைதட்டி நன்றி தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.

 

அதன்படி முதல் அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டின் பால்கனிக்கு வந்து கைத்தட்டி நன்றி தெரிவித்தார். இதேபோல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாஸ் அலுவலம் முன்பாக வெளியில் வந்து ஊழியர்கள் மற்றும் காவலர்களுடன் கைகளை தட்டியும்,  மணி அடித்தும் நன்றியை தெரிவித்தார். இதேபோல் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் மாணவர்கள் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். 
 

இதனிடையே புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும், வெளிமாநில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார் 
 

இதுகுறித்து நாராயணசாமி விடுத்துள்ள அறிவிப்பில், "புதுச்சேரியில் 144 தடை உத்தரவு நாளை முதல் வரும் 31 ம் தேதி வரை தொடரும். அண்டை மாநில அரசு மற்றும் தனியார் வாகங்னகளுக்கும் அனுமதியில்லை. மளிகை, காய்கறி போன்ற பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் உரிய ரசீது காண்பித்தால்  அனுமதிக்கப்படும். புதுச்சேரி அரசின் பேருந்துகள் உள்ளூரில் மட்டுமே இயக்கப்படும்.  வெளிமாநில பயணிகள் வராமல் தடுக்க இரு சக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களிலும்  சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்வது குறித்து அரசு சில மணி நேரங்களில் அறிவிக்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்