Skip to main content

அந்த செய்தி இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது..! -மு.க.ஸ்டாலின் 

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
m meenakshi sundaram - dmk - mla - mk stalin statement

 

 

கீழத்தஞ்சை திராவிட  முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் -  வேதாரண்யம் தொகுதியின் சட்டமன்ற கழக முன்னாள் உறுப்பினரும் - கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவருமான, 'மா.மீ' என அன்புடன் அழைக்கப்படும் அண்ணன் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள், கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது என இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும், கழகத்தின் முப்பெரும் விழாவில் மா.மீ. அவர்களுக்கு "பெரியார் விருது" வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், இயற்கையின் இந்த சதியை ஏற்க மனம் மறுக்கிறது.

 

தனது 17-வது வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்ட மா.மீ. அவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அடியொற்றி, இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.

 

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல், கழகம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் முன்னணித் தளகர்த்தராக கலந்து கொண்டவர், மா.மீ. அவர்கள்.

 

"மிசா"வில் ஓராண்டு காலம் சிறையில் இருந்த அஞ்சாத வீரர் அவர்.

 

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு, மக்கள் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்து, மக்கள் சேவை ஆற்றினார்.

 

கழகத்தில் - கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பு தொடங்கி, பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

 

 நிறைவாக, நாகை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.

 

இத்தகைய சிறப்புக்குரிய மா.மீ. அவர்களுக்கு, இந்த ஆண்டுக்கான "பெரியார் விருது" அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 15-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த 'கழக முப்பெரும் விழா"வில் கலந்து கொண்டு, அவர் அவ்விருதினை நேரடியாகப் பெற்றிருக்க வேண்டும். உடல் நலமில்லாத காரணத்தால், அவர் வர இயலவில்லை.

 

"முப்பெரும் விழா"வில் நான் பேசும்போது, மா.மீ. அவர்களின் அனைத்துச் சிறப்புகளையும் சுட்டிக் காட்டிப் பேசினேன்.

 

 உடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டெழுவார் என்று நினைத்தேன்.

 

எப்போதும் கருப்புத் துண்டு  அணிந்து கம்பீரமாக உலவிய அண்ணன் மா.மீ. அவர்கள், "பெரியார் விருது" பெற்ற சில நாட்களிலேயே  மறைவார் என நான் நினைத்தே பார்க்கவில்லை.

 

கழகத்தினரிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த நன்மதிப்புப் பெற்றிருந்த மா.மீ. அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அவர்களின்  மறைவால் ஆற்றொணாத் துயருறும்  குடும்பத்தினர் - உறவினர்கள் - நண்பர்கள் - கழகத் தோழர்கள் அனைவருக்கும், எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

 

உடலால் மறைந்தாலும், அவர் ஊட்டிய கொள்கை உரம்; எந்நாளும் கழகம் செழிக்கப் பயன்படும் என்பது திண்ணம்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்