Skip to main content

"காங்கிரஸ் அரசின் பெரும்பான்மை குறித்து சட்டப்படி முடிவெடுக்கப்படும்.." - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

"The majority of the Congress government will be decided by law .." Puducherry Governor Tamilisai

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டதையடுத்து, புதிய துணைநிலை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று (17.02.2021) தெலுங்கானாவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த அவர், ராஜ்நிவாஸில் தங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து இன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 31வது துணைநிலை ஆளுநராக, உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜி உறுதிமொழி மற்றும் ரகசியப் பிரமாணம் செய்து வைக்க, அதனை ஏற்றுக்கொண்டு தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, தமிழிசைக்கு சால்வை அணிவித்து, மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன்பு காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், அலுவலகத்திற்கு வந்து கோப்பில் கையெழுத்திட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 5வது பெண் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

"The majority of the Congress government will be decided by law .." Puducherry Governor Tamilisai

 

பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்குத் துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளைக் கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. பதவிப் பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு நிறைவேறியது. 

 

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது. ஆளுநர், துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன். நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அளித்தப் புகார் குறித்து ஆலோசித்து, சட்டப்படி முடிவெடுப்பேன். கவர்னரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்.பி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் என்.ஆர். பாலன் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.

Next Story

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Opposition candidates shared congratulations

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.

இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Opposition candidates shared congratulations

இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

Opposition candidates shared congratulations

மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.