Skip to main content

கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை: பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
KARUNAS 555




“நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது” என்றும், “முற்றிலும் சீரழிந்து விட்ட தமிழக அரசு நிர்வாகத்தை அரசியல் சட்டவிரோத அ.தி.மு.க அரசிடமிருந்து மீட்டு, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்துவிட்ட செழிப்பினை மீண்டும் பெற குடியரசுத் தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடைபெற்றதாக பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வரப்போகின்ற நேரத்தில் புதிய பதவி நீக்கத்தை வைத்து இந்த ஆட்சியின் பதவி காலத்தை ஓட்டி விடலாம் என்ற நப்பாசையில் அடுத்த தகுதி நீக்கத்திற்கு திட்டம் தீட்டுகிறது அ.தி.மு.க அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க அத்தனை நாடகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி நடத்தி கொண்டிருப்பதும், அவசர கதியில் இப்படியொரு நோட்டீஸைக் கொடுக்க முனைவதும் கடும் கண்டனத்திற்குரியது.
 

அதற்கு சட்டப்பேரவைத் தலைவரையும் பயன்படுத்துவது, “பேரவைத் தலைவர் எந்தச் சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவராக, ‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போலத்’ திகழ வேண்டும்” என்று காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரிய மரபையும், வைர அளவுகோலையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி தரம் தாழ்த்தி கேலிக்கூத்தாக்கி, தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்தையே வெறும் காட்சிப் பொருளாக்குவது பேராபத்தாகும்.
 

எதிர்கட்சிகள் போராட்டம் என்றால் அனுமதி மறுப்பது, முறைப்படி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் கடைசி நேரத்தில் நிராகரிப்பது, கையெழுத்து இயக்கம் நடத்த வந்த யோகேந்திர யாதவ் போன்றவர்களை கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்து, கைது செய்வது என்று ஒரு புறம் காவல்துறையை தன் மூக்குப் போன திசையில் மூர்க்கத்தனமாக அ.தி.மு.க அரசு தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது. ஆனால், அதே நேரத்தில் அ.தி.மு.கவினர் பிரதான சாலைகளையெல்லாம் வளைத்து, பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்து விளம்பர பேனர்கள் வைத்தாலும், அ.தி.மு.கவினர் மேடை போட்டு, கேட்போர் முகம் சுளிக்கும் வகையில் எத்தனை அசிங்கமான விமர்சனங்களைச் செய்தாலும், திரு எச் ராஜா உயர்நீதி மன்றத்தையே அநாகரிகமாக விமர்சித்து இழிவுபடுத்தினாலும், திரு எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசினாலும், காவல்துறை காதுகளை மூடி கண்ணைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கட்டளையிடப்படுகிறது.

 

mks



சட்டத்தின் ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறை, இன்றைக்கு கைகட்டி ஊழல்வாதிகளின் கூடாரமாக இருக்கும் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்யும் அளவிற்கு சீரழிக்கப்பட்டு, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகக் கட்டமைப்பின் “ஈரல்” கெட்டு அழுகிப்போய் விட்டது மிகுந்த கவலையளிக்கிறது.

 

ஊழல் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் துறையில் சுதந்திரமாக ஊழல் செய்து உலா வருவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து பதவியில் அமர்ந்திருக்கிறார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் திருமதி கிரிஜா வைத்தியநாதன். அமைச்சர்களின் ஊழல்களுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனே மாற்றுவது, ஒரே துறையில் பல வருடங்களாக “செலக்டீவாக” சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மட்டும் தொடர அனுமதிப்பது, மாவட்டங்களில் அமைச்சர்களின் எடுபிடிகளாக இருக்கும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களாக நியமிப்பது, எதிர்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுவதற்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடவும் ஏற்ற வகையில் அ.தி.மு.க அமைச்சர்களின் பரிந்துரையில் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை நியமிப்பது, சி.பி.ஐ.யே ரெய்டு செய்தாலும் அந்த டி.ஜி.பி.யை வைத்துக் கொண்டு காவல்துறை நிர்வாகத்தை நடத்துவது என்று, காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தை ஊழல் அமைச்சர்களுக்கு மொத்தமாக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கும் வகையில் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் நடந்து கொள்கிறார் என்பது தமிழகம் இதுவரை கண்டிராத அசாதாரணமான அருவருக்கத்தக்க சூழ்நிலையாக இருக்கிறது.
 

 

“நிர்வாகப் பேரிடரில்” சிக்கியிருக்கும் தமிழக அரசு குறித்தும், ஊழல் அ.தி.மு.க அரசு குறித்தும், மாநிலத்தின் நிர்வாகம் பற்றி மத்திய அரசுக்கு மாதாந்திர அறிக்கை அனுப்பும் மாண்புமிகு தமிழக ஆளுநரும் அமைதி காப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது. “மாநிலத்தின் நிலவரங்கள் பற்றி அறிந்து கொள்ளப் போகிறேன்” என்று ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு, தமிழகத்தில் ஒரு ஊழல் அமைச்சரவை இருப்பதும், அரசியல் சட்டத்தின்படி ஆட்சி நடக்காததும், தமிழக நலன் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டு பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து மக்கள் அல்லாடிக் கொண்டிருப்பதும் தெரியாமல் இருக்கிறது என்பது, அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கிறது.


 

edapadi



நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க நடக்கும் கூத்துக்களை வேடிக்கை பார்த்து ஒரு சட்டவிரோத அரசை - மெஜாரிட்டியை நிரூபிக்காமல் அத்தனை தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசை நீடிக்க விட்டு, பா.ஜ.க.விற்கு வாக்களிக்காத தமிழகம் எப்படிப் போனால் நமக்கு என்ன என்ற நினைப்பில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதால் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மவுனமாக ஏனோதானோ என்று இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஐனநாயகம் செத்து, அரசியல் சட்டத்தின் மீதே "மோசடி" செய்து ஒரு எமெர்ஜன்சி போன்ற சூழல் தமிழகத்தில் நிலவுவதை எப்படி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
 

ஆனால், ஊழலின் பெருவெள்ளமாகத் திகழும் அ.தி.மு.க அரசை அனுமதிப்பது பா.ஜ.க.விற்கு வாக்களிக்காத - அல்லது பா.ஜ.க.விற்கு செல்வாக்கு இல்லாத தமிழகத்தில் உள்ள மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் நிச்சயம் கருத மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, முற்றிலும் சீரழிந்து விட்ட தமிழக அரசு நிர்வாகத்தை அரசியல் சட்டவிரோத அ.தி.மு.க அரசிடமிருந்து மீட்டு எடுத்து, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்து விட்ட செழிப்பினை மீண்டும் பெறவும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.