Skip to main content

ஆள் தெரியாமல் Ad போட்ட பாஜக... பதிலடி கொடுத்த ப.சிதம்பரம் மருமகள்...

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

dfd

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கள பிரச்சாரங்களிலும் பேச்சுக்களிலும் அனல் பறந்துகொண்டிருக்க, விளம்பரங்களிலும் கலைகட்டிவருகிறது. பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் சுவர் விளம்பரம், போஸ்டர் என்பதை எல்லாம் விட்டுவிட்டு டிஜிட்டல் உலகில் விஷுவல் விளம்பரங்களில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன. சமீபத்தில் திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களில் ஒரே பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பெரும் பேசுபொருளானது. இது அடங்குவதற்குள் தமிழக பாஜகவின் விளம்பரம் ஒன்று தமிழக மீம் க்ரியேட்டர்களிடம் சிக்கியுள்ளது.

 

தமிழக பாஜக சார்பில் சட்டமன்றத் தேர்தலுக்காக ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ எனும் வரிகளுடன் பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதில் சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரத்தில், ஒரு பெண் பரதம் ஆடுவதுபோல் வந்து அப்போது, ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ என முடிகிறது.

 

இதற்கு, பரதநாட்டிய கலைஞரும், சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காரணம், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர், உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தினார். இதற்காக கலைஞர் எழுத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்...’ எனும் பாடலும் வெளியிடப்பட்டது. அதில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தை வைத்து காட்சிப்படுத்திய பரத நடனத்தைத்தான் தமிழக பாஜக தனது விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளது.

 

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், “பாஜக எனது படத்தை அவர்களின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது அபத்தமானது. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என்றும் தமிழக பாஜகவிற்கு பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸும் பாஜகவை விமர்சித்த சூழலில், பாஜக இந்த விளம்பரத்தைத் தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்