
தமிழ்நாடு முழுவதும் கடந்த, 2006ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின்கீழ் பல கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நூலகங்களால் கிராமப்புற மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருபவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அந்நூலகங்களில் அனைத்து நாளிதழ்களும் இடம்பெறும்படி தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கு முரசொலி, தினகரன், குங்குமம், தமிழ் முரசு என திமுக ஆதரவு ஏடுகளை மட்டும் வாங்கவும், அதற்கான ஓராண்டு சந்தாவை முன்கூட்டியே செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது நியாயமற்றது.
நாளிதழ்களுக்கான சந்தா, விளம்பரம் ஆகியவற்றில் தமிழக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களுக்கும் அனைத்து ஆங்கில, தமிழ் நாளிதழ்களையும் வாங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.