Skip to main content

’உயர் கல்வி துறை செயலரின் பேச்சு அபத்தமானது’-  கல்வியாளர்கள் சங்கம் கண்டனம்

Published on 18/03/2018 | Edited on 18/03/2018
eng

 

ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாத மாணவர்கள் பொறியியல் படிக்க தகுதியற்றவர்கள் என்னும் உயர்கல்வித்துறை செயலர் அவர்களின் பேச்சு அர்த்தமற்றது என்பதைவிட அபத்தமானது என்று கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது..

 

தமிழகக் கல்வி முறை ஒன்றும் முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் ஊறிய பாடத்திட்டத்தையும், வகுப்பறைகளையும் கொண்ட கல்விமுறை அல்ல.   இப்பொழுதுதான் பள்ளிக்கல்விச் செயலராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு அதற்கான விதையே தூவப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆசிரியர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் இன்னும் இணையதளம் என்றால் என்னவென்றே தெரியாத கல்வித்தரத்தைக் கொண்டுதான் நம் கல்விமுறை பயணப்பட்டு வந்துள்ளது.

 

இன்னும் நம் பள்ளிகளுக்கு கழிப்பிட வசதிகளும்,குடிநீர் வசதிகளுமே முழுமையடையாமல் இருக்கும்பொழுது கணிணியில் தன்னிறைவு என்பது கானல் நீராகவே இருக்கும்.

 

  உண்மை இப்படி இருக்க  பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழி விண்ணப்பிக்கத் தெரியாத மாணவர்கள் பொறியியல் படிக்கவே தகுதியற்றவர்கள் என்னும் உயர்கல்வித்துறைச் செயலர் அவர்களின் கூற்று வருத்தத்தை அளிக்கிறது.

 

விவசாயம் தெரியாதவர்கள் எவரும் உணவைச் சாப்பிட தகுதியற்றவர்கள் என அறிவித்தால் எப்படி இருக்கும் அதுபோலத்தான் இந்த அறிவிப்பும் தோன்றுகிறது.  

 

உலகின் தலைசிறந்த சொல்- முடிந்தால் குறைசொல்வதை விடுத்து செயலாற்றுங்கள்.. என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்