Skip to main content

“50 வருடமாக கெடுத்ததை சரிசெய்ய, ஐந்து வருடம் போதாது” - கமல்ஹாசன்

Published on 23/03/2021 | Edited on 23/03/2021
The good people in DMK and AIADMK should come to the MNM

 

திருவெறும்பூரில் நடந்த மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இது பற்றிய விபரம் பின்வருமாறு; திருவெறும்பூரில் நடந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரச்சாரக் கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளரும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான முருகானந்தம் தலைமை வகித்து தான் எம்எல்ஏவாக ஆனால் திருவெறும்பூர் தொகுதியில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து வசதி, ஐந்து கிலோ மீட்டர் இடைவெளியில் பொது கழிப்பிட வசதி இருபாலருக்கும், சாலை, மழைநீர் வடிகால், 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத  சர்வீஸ் சாலை பிரச்சினைக்குத் தீர்வு, பட்டா வழங்கப்படாத இடங்களுக்கு பட்டா, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இறந்தால் ஈம சடங்கிற்கு ரூ 5000, கிராமம் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம், மூன்று வருடத்தில் 50 படுக்கைகள் கொண்ட மினி அரசு மருத்துவமனை, இரண்டு வருடத்தில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திருவெறும்பூரில் ஆண்டிற்கு ஒருமுறை தமிழ் திருவிழா என்ற பெயரில் பாரம்பரிய விழாக்கள் நடத்துவது உள்ளிட்ட 25 திட்டங்கள் அடங்கிய பாண்டு பேப்பரில் கையெழுத்திட்டு மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசனிடம் வழங்கினார்.

 

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கமல்ஹாசன் பேசியதாவது, “இல்லத்தரசிகளுக்கு சம்பளம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளோம். உயிர் கொடுக்கும் தாய்க்கு நாம் கொடுக்க வேண்டியது, இருக்கும் பொருளாதாரத்தில் தாய் குளத்திற்கு பங்கு உண்டு. எங்கள்  திட்டத்தை பார்த்துதான் அதிமுக, திமுக அறிவிக்கிறது, அதற்கும் ஒரு திட்டம் உள்ளது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும், இல்லத்தரசிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் தொழில் செய்ய கற்றுக் கொடுத்தல் போதுமானது. அதன் மூலம் அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று கூறினார். மேலும் இலவசங்கள் தராது என்றும் பாண்டு பத்திரத்தில் துணிச்சலாக பிரகடனம் செய்வது மக்கள் நீதி மையத்தின் நேர்மையை காண்பிக்கிறது. மக்களிடமிருந்து ஓடவும் முடியாது   ஒளியவும் முடியாது. நான் அதற்காக வரவில்லை, தன்மானம், நேர்மையை நீங்கள் மதியுங்கள் இந்த தேர்தல் அடுத்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நீங்கள் தான் உழைத்து முன்னேற வேண்டும். அதன்மூலம்  நீங்களும், நாடும் முன்னேற வேண்டும் அதற்கு தேவையான களத்தை உருவாக்குவது எங்களது கடமை என்றும் கூறினார்.

 

The good people in DMK and AIADMK should come to the MNM

 

மேலும் சுத்தமான குடிநீர், மருத்துவம், கல்வி இது அனைவருக்கும் கிடைப்பதற்கு வழி செய்வது அரசின் கடமை. அதை சரியாக செய்திருந்தால் உலக அரங்கில் இந்தியா எங்கோ சென்றிருக்கும். தற்போது நான்காவது கட்டமாக இந்த தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும், தமிழகத்தில் சாக்கடை, போக்குவரத்து நெரிசல், ரிங்ரோடு இல்லாதது. இங்கு இருக்கும் குப்பை மேடு  தமிழகத்திற்கே தெரியும் அளவிற்கு  உள்ளது. இதை பவர் ஜெனரேட்டாக மாற்ற முடியும். வாக்கு கேட்கும் முன்பு திட்டத்தை தீட்டி தான் நாங்கள் வந்திருக்கிறோம். நான் கூட எனது ரசிகர் மன்றங்களை 40 வருடங்களுக்கு முன்பாகவே நற்பணி மன்றங்களாக மாற்றி சேவைகளை செய்து வருகிறேன். அதிகாரம் என்பது ஆட்சியில் இருப்பது இல்லை சேவையில் என்றார். மேலும் பணக்காரர்களின் மீது எங்களுக்கு கோபம் கிடையாது, வறுமைக்கோடு பேசாமல் செழுமை கோடு பேசுகிறோம். ஜிஎஸ்டி, காலத்திலும் வறுமைக்கோட்டிற்கு செல்லாமல் இருப்பதற்கு வழி செய்ய வேண்டும். ஏழைகளின் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்றும் கல்லாப்பெட்டியில் குறியாக இருக்கும் இவர்கள் அகல வேண்டும். இதனை கோவை தெற்கு தொகுதியில் ஏழைகள் வசிக்கும் குப்பத்தில் பேசினேன்.

 

நாம் செய்ய வேண்டியதை செய்தால் தான் மக்கள் நீதி மையம் சிறந்து விளங்கும். நாலரை வயதில் இருந்து நான் நடிக்கிறேன் ஆனால் இவ்வளவு அன்பை பார்த்ததில்லை. மேலும் பாண்டு பத்திரத்தில் எழுதி கொடுத்த திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே நாங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை.  50 வருடமாக கெடுத்ததை சரிசெய்ய, ஐந்து வருடம் போதாது. ஆனால் எங்களுக்கு ஐந்து வருடத்தை கொடுத்துப்பாருங்கள் உங்களுக்காக உழைக்கிறோம். அதில் ஊழல் இல்லாத தமிழகத்தை அமைத்தால் அந்த நிதியில் தமிழகம் செழிக்கும். தற்பொழுது ஒவ்வொருவர் பெயரிலும் 65 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. மேலும் பெண்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு நேரம் ஒதுக்கி கொடுங்கள். பெண்களின் வளர்ச்சிக்கு, ஆண்கள் தடை சொல்லாதீர்கள். தாய்மார்கள் முன்னேற்றம்தான் தலைமுறை முன்னேற்றம், ஆண்கள் படிப்பதை விட பெண்கள் தான் அதிகளவில் படித்து முன்னேறுகிறார்கள் அவர்கள் படித்தால் அடுத்த தலைமுறையை கல்வியறிவு பெரும், பெண்கள் தான் ஒரு உயிரை சுமக்கிறார்கள். அது நம்மால் முடியாது, பெண் பூமி நாம் வெறும் ஏணி.

 

The good people in DMK and AIADMK should come to the MNM

 

பெண்கள் தேகப் பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றையும் மேற்கொள்வதால் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகும். தமிழகத்தின் பணக்காரன் என்பவன் மாநகரப் பகுதிகளில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாக்கடை சுற்றிதான் இருப்பான். இலவசம் எப்போதும் ஏழ்மையை போக்காது, உழைப்பது மட்டுமே ஏழ்மையை போக்கும். ஆரம்ப கல்வியை அனைவருக்கும் இலவசமாக கற்பிக்கவேண்டும். மருத்துவமனை, சுகாதாரமாக இருக்கவேண்டும், குடிநீரில் சாக்கடை கலந்தால் மிருகங்கள் கூட குடிக்காது. இது அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் போனதால்தான் எவ்வளவு அழுக்கான தண்ணீரையும் சுத்தம் செய்துவிடும் என்று கூறி இயந்திரத்தை வைத்து சுத்தம் செய்து குடிக்கிறார்கள். அரசியல் எங்கள் தொழில் இல்லை, அரசியல்வாதிகள் வெளிநாட்டில் பதுக்கியுள்ள பணங்களை கொண்டு வருவதற்கு கேள்விகேட்காதவர்கள் என் வண்டியை சோதனை செய்கிறார்கள். கட்டுக்கட்டாக பணம் எடுத்தவர்கள் என்னைக் கேட்கிறார்கள். மண் அள்ளுவது உரிமை என்று கூறியவர் மீது ஏழு வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும், அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். காவல்துறையினர், மனிதர்களுக்காகதான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது என்றும் கூறினார். மேலும் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று கூறி உள்ளோம். அது எப்படி என்று கேட்டால் கணக்கிட்டுப் பாருங்கள் திருவெறும்பூர் தொகுதியில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றால் 234 தொகுதிகளில் எவ்வளவு பேருக்கு என்று கூறினார். 

 

மேலும் டாக்டர் இன்ஜினியர் படிப்பு மட்டும் படிப்பு அல்ல, பல தொழில்கள் உள்ளது. உலகத்திற்கு ஆண்டிற்கு 9 லட்சம் இன்ஜினியர்கள் தான் தேவை. அது தமிழ்நாட்டிலேயே கிடைப்பதால் தான் வேலை இல்லாமல் போகிறது இதனால் படிப்பு வீண் போகாது. கல்விமூலம் ஞானத்தையும், திறமையும் வளர்த்துக் கொள்ளுங்கள், மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உதவ வேண்டும். எனக்கு அடுத்த தலைமுறையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். தவறு நடக்காது என்று சொல்லவில்லை, அதை திருத்துவோம், இலவசம் என்கிற அபாயம் அது நம்மை சுடும் நெருப்பு என்பது லேட்டாக தான் தெரியும். திருடனிடம் இருந்து கட்சியை உருவாக்க முடியாது. உங்களுக்காக கதவு திறந்திருக்கிறது, மேலும் ஓட்டை போட முடியாத கோட்டை என்றும் நேர்மை உள்ளவர்கள் வரலாம் என்றும் கூறினார். மேலும் கெட்டவர்களின் கோட்டையை இடித்து தரைமட்டமாக்க அதற்கு மணலை அள்ளி போடுவதற்காக வாருங்கள் உங்கள் ஆள்காட்டி விரலின் முத்திரையை டார்ச் லைட் சின்னத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பதிவிடுங்கள், நாளை நமதே. நான் ரசிகனின் ரசிகன், திறமையானவர்கள் எங்கு இருந்தாலும்  மக்கள் நீதி மையம் சகோதரத்துவத்துடன் வரவேற்பதாகவும் திமுக, அதிமுக’வில் உள்ள நல்லவர்கள் மக்கள் நீதி மையத்தினை நோக்கி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி சரித்திரத்தின் திறப்பு தேதி ஆக மாறும் புதிய வாக்காளர்கள் மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிப்பார்கள்”என்று கூறினார்.

 

The good people in DMK and AIADMK should come to the MNM

 

முன்னதாக ஹரிகரன் வரவேற்றார், ஜானி பாஷா நன்றி கூறினார். இதில் மக்கள் நீதி மையத்தின்  கட்சி நிர்வாகிகள் வக்கீல் சுவாமிநாதன், அய்யனார், ஆனந்தகுமார், சூரியூர் சக்தி, மலை ஆனந்தன், சகுபர் சாதிக், கார்த்திக், ராமன்  மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கீழ கல்கண்டார் கோட்டையில் திருவெறும்பூர் மக்கள் நீதி மையம் வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

 

 

 
 

சார்ந்த செய்திகள்